3 மாத இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கக் கூடாது.. உச்சநீதிமன்றம் பரிந்துரை.. நிதியமைச்சகத்துக்கு நோட்டீஸ்
டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக 3மாதம் சலுகை அளிக்கப்பட்ட கடனுக்கு வங்கிகள் வட்டி வசூலிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இது தீவிரமான பிரச்சனை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம் பதில்அளிக்குமாறு மத்திய நிதியமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பால் மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் மார்ச் மாதத்தில் செலுத்தப்பட வேண்டிய கடன்களை செலுத்த மே 31 வரை அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
அத்துடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் இந்த அவகாசத்தை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து அண்மையில் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. கடன் இஎம்ஐ செலுத்த இந்த 6 மாத காலத்திற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
'ஏ' பாசிட்டிவ் இரத்தம் உள்ளவர்களை கொரோனா மோசமாக பாதிக்கிறது? யாரை அதிகம் பாதிக்காது?
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் அவகாசம் நீட்டிக்கப்பட்ட போதிலும், கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்நிலையில் வங்கி கடன் இஎம்ஐ செலுத்த தரப்படும் சலுகையை பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் கூடுதல் வட்டியை தள்ளுபடி செய்யக்கோரி ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிகும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வங்கிகளை பாதிக்கும்
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்ய் கிஷண் கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில் இஎம்ஐ கடன் காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்வது சாத்தியமற்றது. இதனால் வங்கிகளின் நிதி நிலைத்தன்மை கடுமையாக பாதிக்கப்படும். கடன் வட்டி வருவாயையே வங்கிகள் அதிகம் நம்பி இருக்கின்றன. வட்டி தள்ளுபடி செய்யப்பட்டால் வங்கிகளுக்கு 2.01லட்சம் கோடி இழப்பு ஏற்படும். இது நாட்டின் ஜிடிபியில் ஒரு சதவீதம் ஆகும். இதன் காரணமாக வங்கிகள் பாதிக்கப்படுவதோடு, பணத்தை டெபாசிட் செய்துள்ள மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியருந்தது.
உச்ச நீதிமன்றம் பரிந்துரை
இதை கேட்ட நீதிபதிகள், "இக்கட்டான இந்த நேரத்தில் ஒரு பக்கம் இஎம்ஐ செலுத்த கால அவகாச சலுகை அளித்துவிட்டு, மறுபக்கம் வட்டி வசூலிப்பது மிகத்தீவிரமான பிரச்சனை. அவகாசம் வழங்கிய சலுகை காலத்தில் கடன்களுக்கான எந்த வட்டியும் வசூலிக்கக்கூடாது. அல்லது வட்டிக்கு வட்டி போடக்கூடாது என்ற விஷயங்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதற்கு மத்திய நிதியமைச்சம் பதில் அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.
12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மத்திய அரசின் சொலிசட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அப்போது எழுந்து பதில் அளிக்க அவகாசம் கோரினார். இதையடுத்து உச்ச நீதிமன்றம் வரும் 12ம் தேதி வரை அவகாசம் தந்து வழக்கை ஒத்திவைத்தது. வங்கிகள் இஎம்ஐ செலுத்த அவகாசம் அளித்தது பெரிய பலன் இல்லை. வட்டியை தள்ளுபடி செய்தால் தான் பலன் இருக்கும் என்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை கையில் எடுத்திருப்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.