வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறை.. உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு
டெல்லி: வங்கி கடன் தவணை விவகாரத்தில் மத்திய அரசிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம் வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறை குறித்து இன்று விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் இன்று வழக்கில் முக்கிய திருப்பங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
கொரோனா பாதிப்பு மற்றும் அதனால் போடப்பட்ட ஊரடங்கால் மக்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார். இதை உணர்ந்த ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரையில் வங்கிகளில் செலுத்தப்பட வேண்டிய கடன்களுக்கு தவணையை தள்ளி கட்டாமல் பின்னால் கட்டலாம் என காலஅவகாசம் அளித்தது
ஆனால் அப்படி கடனை தள்ளி கட்டினாலும் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படாது என்று வங்கிகள் அறிவித்துள்ளன. அத்துடன் வங்கி கடனை கட்டாத ஆறுமாத காலத்திற்கும் கூடுதல் வட்டி வசூலிக்க முடிவு செய்துள்ளன. இதன்படி ஒவ்வொருவரின் கடன் தொகை மற்றும் இஎம்ஐ அளவும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
கடலூரில் மளிகை பொருட்களை கடன் கேட்டு.. வீச்சரிவாளுடன் மிரட்டும் நபர்.. சிசிடிவி காட்சிகள்
உச்ச நீதிமன்றம் கேள்வி
இந்நிலையில் கொரோனா காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்யக்கோரியும், வட்டியை தள்ளுபடி செய்யக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடன் தவணை செலுத்துவதற்கு மக்களுக்கு அவகாசம் அளித்து விட்டு, வட்டிக்கு வட்டி வசூலிப்பதா என கேள்வி எழுப்பியது.
உறுதியான நடவடிக்கை தேவை
இந்த விவகாரத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழி வகை உள்ளது. மத்திய அரசு பொறுப்பில் இருந்து விலகக்கூடாது. உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு,. கடன் தவணை செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டது. இதன்படி ஒருவார காலஅவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம் உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தியது,
2 வருடம் அவகாசம்
இந்நிலையில் காலஅவகாசம் முடிந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும் போது ‘‘கடன் தவணை செலுத்தும் காலத்தை ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைப்படி 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். இதில் பல்வேறு விவகாரங்கள் உள்ளடங்கி உள்ளது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23 சதவீதம் சரிந்துள்ளது. பொருளாதாரம் மிகவும் நெருக்கடியில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்'' என்றார்.
அவகாசம் தேவை
மேலும் அவர் கூறும் போது, ‘‘கொரோனா காரணமாக நாட்டின் பல்வேறு துறைகள் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண சிறிது அவகாசம் தேவை. வங்கிகள் சங்கத்துடன் இதுதொடர்பாக பேச்சு நடத்தப்படுகிறது' என்றார்.
இன்று முக்கிய விசாரணை
இதை கேட்டு அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு இதுபோல் கால அவகாசம் மட்டுமே கேட்கிறது. ஆனால் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்றார்கள். எனவே, கடன் தவணை நடவடிக்கை தொடர்பாக இன்று விசாரணை நடத்தி முடிவு எடுப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.