அரசின் சிறுபான்மை மெரிட் அடிப்படையில் சிஎம்சி கல்லூரியில் மாணவர் சேர்க்கை - உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தமிழக அரசு வழங்கும் கிறித்துவ சிறுபான்மை மெரிட் பட்டியலின் அடிப்படையில் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மருத்துவ மேற்படிப்பில் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் இருக்கும் மொத்த இடங்களில் 50சதவீதம் அகிலஇந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இதில் மீதமுள்ள 50 சதவீத இடங்களை கிறிஸ்துவ மத சிறுபான்மையினருக்கு நீட் மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் வழங்கி வருகிறது.
ஆனால் இதனை கிறிஸ்துவ மதத்தை சார்ந்த ஒரு பிரிவினருக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீட்டை கல்லூரி வழங்கி வருவதால் மற்ற தரப்பினர் பாதிப்படைகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி! டெல்லியில் எடுபடாத லாபி! ஏமாற்றத்தில் முக்கியப் புள்ளிகள்!
வேலூரி சிஎம்சி கல்லூரி
இதையடுத்து மருத்துவ சேர்க்கையில் அகிலஇந்திய ஒதுக்கீடுக்கு 50சதவீதம் ஒப்படைத்தது போக மீதம் இருக்கும் 50சதவீத இடங்களை மாநில மத சிறுபான்மையினர் பட்டியலின் அடிப்படையில் அனைவருக்கும் பங்க்கீட்டு வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட அரசு அறிவுறுத்தலுக்கு எதிராக வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அநீதி என வாதம்
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் மற்றும் அரசு வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், கிறித்தவ மத சிறுபான்மை நிறுவனம் என்றாலும் அவர்கள் தமிழக அரசின் மாநில மத சிறுபான்மையினர் பட்டியலின் அடிப்படையில் மெரிட் அடிப்படையில் அனைவருக்கும் பங்க்கீட்டு வழங்க வேண்டுமே தவிர கிறித்தவர்களின் ஒரு பிரிவினருக்கு மட்டும் வழங்கினால், அது கிறிஸ்தவர்களின் பிற பிரிவினரை பாகுபடுத்தி பார்ப்பதோடு சம்மந்தப்பட்ட கிறித்தவ பிரிவினரை சாராத அதிக மதிப்பெண் எடுத்த நபருக்கு இழைக்கும் அநீதி ஆகும் என வாதிடப்பட்டது.
நீதிமன்றத்தில் வலியுறுத்தல்
மாநிலத்தின் கிறித்தவ சிறுபான்மை பட்டியலின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதேவேளையில் சி.எம்.சி நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், கிறித்தவ மத சிறுபான்மை நிறுவனம் என்பதால் அதன் ஒதுக்கீடு இடங்களை அவர்களின் விதிகளின்படி நீட் கலந்தாய்வு மெரிட் அடிப்படையில் நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு பதிவு செய்த நீதிபதிகள், சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் நடப்பு 2021-22க்கான முதுநிலை மருத்துவ சேர்க்கைக்காக, நீட் மதிப்பெண் கலந்தாய்வு அடிப்படையில் கிறிஸ்துவ சிறுபான்மையினரின் மாநில தகுதி பட்டியலை தயார் செய்து தமிழக அரசு கல்லூரி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் எனவும், அதனடிப்படையிலேயே சி.எம்.சி நிர்வாகம் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு முதுநிலை மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.