ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்ற ஹைகோர்ட் உத்தரவு செல்லும் - சுப்ரீம் கோர்ட்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் செயல்பட்டு வந்தது. அப்பகுதியில் சுற்றுச் சூழலை நாசமாக்கியதால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு வலுத்தது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும், பல்வேறு நோய்களுக்கு வித்திடுவதாகவும் கூறி, 2018ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது.
அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட தமிழக அரசு, ஆலையை மூட உத்தரவிட்டது.
தலைமறைவு குற்றவாளி.. தீர்ப்பை ரத்து செய்யக் கோரிய விஜய் மல்லையாவின் மனு.. சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி!
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்றும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என தீர்ப்பு அளித்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த விசாரணையின் போது தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு, மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் வேதாந்தா குழுமத்தின் அப்பீல் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்கிறது. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த விசாரணை நடைபெற்றது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள்,ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை என்று தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை ஆலை திறப்பதற்கான தடை தொடரும் என்றும் இந்த வழக்கின் சம்மந்தப்பட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.