மேகதாது அணைக்கு எதிராக வழக்கு... 3 வாரத்தில் பதில் தர 4 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை
டெல்லி:மேகதாது அணை தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் 3 வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆற்றில் புதிதாக 5,912 கோடி ரூபாய் செலவில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 400 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைத்து மின்சார உற்பத்திக்காவே இந்த அணை கட்ட முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு, மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த நிலையில், நீர்வள ஆணையமும் அனுமதி அளித்தது. கர்நாடகா காவிரி நதிநீர் பங்கீட்டை தமிழகத்துக்கு முறையாக வழங்காத நிலையில், மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்ட தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். அதில் மேகதாது அணை தொடர்பான கர்நாடகாவின் அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
மேலும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுதவற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அதே நேரத்தில் மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் கர்நாடகாவுக்கு அளித்த அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
மேலும் இதுகுறித்து 3 வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.