தமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Recommended Video
டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை அக்டோபரில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜே எஸ் சுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.
உள்ளாட்சி தேர்தல் நடத்த இயலாது
அப்போது மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தமிழகத்தில் அக்டோபர் 31 வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது என கூறியிருந்தது.
தமிழக தேர்தல் ஆணையம்
வார்டு மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், மாநிலத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் வார்டு வரையறை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்டோபர் இறுதி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
உறுதி
அப்போது இந்த வழக்கு இன்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபருக்குள் வார்டு மறுசீரமைப்புகளை முடித்துவிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தை ஏற்று தேர்தல் அறிவிப்பை அக்டோபரில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.