ராஜீவ் கொலை.. 7 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.. 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது, கொலையான 14 பேரின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, 1991ம் ஆண்டு மே 21-ம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அப்போது அவருடன் கூட்டத்தில் பங்கேற்ற 14 பேரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை, 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால், விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அமைச்சரவையின் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல், ஆளுநர் காலம் தாழ்த்தி வரும் நிலையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய கூடாது என்று, அந்த சம்பவத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினர், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கு குறித்து மத்திய அரசின் பதிலை உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் பல்வேறு பிழைகள் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து இன்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மேலும் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.