ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான திமுகவின் உச்ச நீதிமன்ற வழக்கு.. 15 நாட்களுக்கு ஒத்திவைப்பு!
டெல்லி: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக தொடர்ந்த வழக்கில் இன்னும் முழுமையான முடிவு வரவில்லை. கடந்த 2017ல் பிப்ரவரி மாதம் அதிமுக சார்பாக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார்.
அப்போது அதிமுக கட்சி ஓ.பி.எஸ் அணி - இ.பி.எஸ் அணி என்று இரண்டாக இருந்தது. இதில் ஓ.பி.எஸ் அணியில் இருந்த 11 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக கொறடாவின் உத்தரவு மீறி வாக்களித்தனர்.
ஆனால் அப்போது ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யவில்லை. அதன்பின் அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றாக சேர்ந்தது. ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி ஏற்றார். இதையடுத்து கொறடா உத்தரவை மீறிய ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. அதில் சபாநாயகர்தான் இதை முடிவு எடுக்க வேண்டும். அவர் முடிவு எடுக்க வேண்டும் என்று எங்களால் வற்புறுத்த முடியாது. ஆனால் அவர் விரைவாக முடிவை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட உலகின் பெரும் கோடீஸ்வரர்.. ஹீரோ போல வந்து காத்த மகன்.. மாஸ் சம்பவம்!
இந்த நிலையில் இத்தனை நாட்கள் ஆகியும் சபாநாயகர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக முடிவு எடுக்கவில்லை. இதனால் தற்போது மீண்டும் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி மீண்டும் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
தலைமை நீதிபதி போப்டே விசாரணை இன்றி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.