அப்பீலுக்கு காசு தராத நாராயணசாமி.. களம் குதித்த மத்திய அரசு.. கிரண் பேடிக்காக வழக்கு!
டெல்லி: புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அரசின் அன்றாட நிகழ்வுகளில் கிரண்பேடி தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டி, புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதிகாரத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆவணங்களை ஆளுநர் ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும் தீர்ப்பளித்திருந்தது
இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி கிரண்பேடி சார்பில், மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தனது பணிகளை சரிவர மேற்கொள்ள இயலவில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது.
அவசர வழக்காகவும் விசாரிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறி விட்டதால், இவ்வழக்கு விசாரணை ஜூலையில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.