குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை இல்லை: உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலில் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது, சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள், வன்முறைகள் நாடு முழுவதும் தொடருகின்றன.
நாங்கள் வழக்குகளை விசாரிப்பதே அமைதியை ஏற்படுத்தத்தான். போராட்டங்களும் வன்முறைகளும் முடிவுக்கு வரும் வரை இவ்வழக்குகளை விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் தெரிவித்தது.
இதன் பின்னர் கேரளா அரசு தரப்பிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 144 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இம்மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் அப்துல் நாசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இவ்வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு நடைமுறை தொடங்க உள்ளது. ஆகையால் சி.ஏ.ஏ.வுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறினர்.
மேலும் அஸ்ஸாமில் இச்சட்ட திருத்தத்தால் சமநிலை பாதிக்கும் என அஸ்ஸாம் மாணவர் சங்கம் வாதிட்டது. இதனையடுத்து அஸ்ஸாம் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றம் தனியே விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
144 மனுக்களின் வழக்கறிஞர்கள் ஒரே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் குவிந்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, கூட்டத்தை ஒழுங்குபடுத்த பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டார்.