மோடி வெற்றிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு படை வீரர் போட்ட பரபரப்பு கேஸ்.. உச்சநீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி: வாரணாசியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரி முன்னாள், எல்லை பாதுகாப்பு படை வீரர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ராமசுப்பிரமணியன் ஆகிய 3 நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
ஏர் இந்தியா அதிநவீன விவிஐபி விமானத்தில், திருப்பதிக்கு வந்த ராம்நாத் கோவிந்த்.. என்ன சிறப்பு?
வாரணாசியில் மோடி வெற்றி
2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் நரேந்திர மோடி. அப்போது சமாஜ்வாதி கட்சி சார்பில் தேஜ் பகதூர் யாதவ், என்பவர் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இவர் எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளாக பணியாற்றியவர்.
எல்லை பாதுகாப்பு படை வீரர்
பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டி 2017ல் மூன்று வீடியோக்களை சமூக வெளியில் பகிர்ந்தார் தேஜ் பகதூர் யாதவ். இது ராணுவ விதிகளுக்கு மாறானது என்ற குற்றச்சாட்டால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்தான் தேஜ் பகதூர் யாதவ்.
தேஜ் பகதூர் யாதவ்
எனவே தேஜ்பகதூர் யாதவ் மோடிக்கு எதிராக போட்டியிடப் போவது அப்போது பரபரப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் இவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தேஜ்பகதூர் யாதவ் வழக்கு தொடர்ந்திருந்தார். தனது வேட்பு மனுவை சட்டவிரோதமாக தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. பிரதமர் மோடியின் வெற்றியை எளிதாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மனுதாரர் குற்றம் சாட்டினார். ஆனால், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
மனு டிஸ்மிஸ்
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தேஜ்பகதூர் யாதவ் மேல்முறையீடு செய்திருந்தார். மோடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகினார். மனுதாரர் தரப்பில் சத்தியபால் ஜெயின் ஆஜரானார். ஆனால் இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், இந்த மனுவை விசாரிப்பதற்கான முகாந்திரம் இல்லை என்று தெரிவித்து விட்டது.