ஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு
டெல்லி; உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஒருவழியாக தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் வெளியான 100 முக்கிய தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. இந்த மொழி பெயர்ப்பு தீர்ப்புகள் வெளியிடப்பட்டபோது அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடம், மராத்தி, ஒடியா ஆகிய ஆறு மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடத் திட்டமிடப்பட்டது. இந்த பட்டியலில் தமிழ் இல்லை என்பதால், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளைத் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
மாநில மொழிப் பட்டியலில் தமிழ் இல்லை என்பதால் தமிழகத் தலைவர்கள் இதற்கு கண்டனமும் தெரிவித்தனர். நமது எம்.பி.க்கள் கோரிக்கையும் வைத்தனர். அதோடு இதுதொடர்பாக திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவரை சந்தித்து மனுவும் அளித்திருந்தார்.
குடியரசுத் தலைவர் பங்கேற்பு
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். இந்தவிழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ராம்நாத்கோவிந்த் பெற்றார்
திறப்பு விழாவை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார்.
|
தாய்மொழிகளில் தீர்ப்புகள்
இது குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "உச்சநீதிமன்றத்தில் வெளியான 100 முக்கியமான தீர்ப்புகளின் மொழிபெயர்ப்பை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்த தீர்ப்புகள் இப்போது பல்வேறு பிராந்திய மற்றும் இந்திய மொழிகளில் கிடைக்கும். இதன்மூலம் ஆங்கிலம் தெரியாத பல கோடிக்கணக்கான பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எளிமையாக தங்களுடைய மொழிகளிலேயே படித்துக்கொள்ளலாம்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதுவே எங்கள் நோக்கம்
மேலும், "உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழங்கப்படும் பெரும்பாலான தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்"என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு கிடைத்துள்ளது குறிப்பிட தக்கது.