அயோத்தி விவகாரம் மத நம்பிக்கை, உணர்வுப்பூர்வமானது.. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து
டெல்லி:அயோத்தியா விவகாரம் உணர்வுப்பூர்வமானது, மத நம்பிக்கையுடன் தொடர்புடையது என்பதால் மத்தியஸ்தர்களை சம்பந்தப்பட்டவர்களே பரிந்துரை செய்யலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மனுக்களை விசாரிப்பதற்கு, அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரசூட், யு.யு. லலித் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்களை இந்த அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்திருந்தது.
அயோத்தி வழக்கில் மத்தியஸ்தம் குறித்து உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்.. தீர்ப்பு ஒத்திவைப்பு
நீதிபதிகள் அமர்வு
ஆனால், அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம் சமூக மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதல்வர் கல்யாண் சிங் சார்பில் நீதிமன்றத்தில் யு.யு. லலித் வாதாடியுள்ளார். அவர்தான் தற்போது 5 நீதிபதி கொண்ட அமர்வில் நீதிபதியாக இருக்கிறார் என்று தெரிவித்தார். அதனால், அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யு.யு. லலித் அறிவித்தார்.
புதிய அமர்வு அமைப்பு
இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷன், நசீர் ஆகியோர் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த புதிய அமர்வு, இதுதொடர்பான உத்தரவை மார்ச் 6-ம் தேதி பிறப்பிப்பதாக கூறியது.
உச்ச நீதிமன்றத்தில்விசாரணை
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் மனுதாரர்களில் ஒருதரப்பான இந்து மகாசபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்தியஸ்தர்கள் மூலம் பிரச்சினைக்கு தீ்ர்வு காண்பதில் உடன்பாடு இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்றமே வழக்கை விசாரித்து உரிய தீர்ப்பை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஏன் எதிர்க்க வேண்டும்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி பாப்தே, முன்கூட்டியே இதுபோன்ற கருத்துக்களை ஏன் தெரிவிக்க வேண்டும், மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண வாய்ப்பு இருந்தால் அதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்று கூறினார்.
நிலம் அரசுக்கு சொந்தம்
அப்போது மத்தியஸ்தர்கள் தீர்வு என்பதை உ.பி அரசு தரப்பும் ஏற்க மறுத்தது. வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தம் என்பதால் இந்த வழக்கில் மத்தியஸ்தர்கள் உதவியை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
நீதிபதிகள் பேசியது என்ன?
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:அயோத்தி விவகாரம் நில பிரச்சனை மட்டுமல்ல. அது மதம் சம்பந்தப்பட்டது. உணர்வுபூர்வமானது. ஆகவே... தான் மத்தியஸ்தம் என்பதை நீதிமன்றம் முன் வைக்கிறது.
உணர்வுகள் என்ன?
அதற்கு முன்னதாகவே தீர்வு என்பது எப்படி ஏற்க முடியும்?நிலம் என்ற கோணத்தில் நீதிமன்றம் இந்த விவகாரத்தை முன்வைக்கவில்லை. மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டுள்ளது என்று கூறினர்.
விதிமுறைகள் வேண்டும்
அதே நேரத்தில் இஸ்லாமியர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் வருமாறு:மத்தியஸ்தம் என்ற முடிவுக்கு நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். அதே நேரத்தில் அதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளை வகுக்கவேண்டும் என்று கூறினர்.