அவமதிப்பு.. அனில் அம்பானி குற்றம் நிரூபணம்.. சிறை தண்டனை விதிப்பதாக சுப்ரீம் கோர்ட் அதிரடி
Recommended Video
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அனில் அம்பானி குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தொழிலதிபர், அனில் அம்பானியின், 'ஆர்-காம்' என்று அழைக்கப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தொலைபேசி மற்றும் மொபைல் போன் சேவைகளை வழங்கும் பணியை, எரிக்சன் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கியிருந்தது.
இந்த நிலையில், தங்களுக்கு, 1,500 கோடி ரூபாயை, அனில் அம்பானி நிறுவனம் நிலுவை வைத்துள்ளதாக, எரிக்சன் இந்தியா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தது.
ரூ.550 கோடி சமரசம்
இவ்வழக்கில், 550 கோடி ரூபாயை மொத்தமாக வழங்க வேண்டும் என்று எரிக்சன் இந்தியா சமரசத்துக்கு வந்தது. இதையடுத்து, கடந்த வருடம், டிசம்பர் 15ம் தேதிக்குள், இந்தத் தொகை வழங்கப்படாவிட்டால், நீதிமன்ற அவதூறு வழக்கை தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அவமதிப்பு வழக்கு
ஆனால், உத்தரவுப்படி பணம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, எரிக்சன் இந்தியா சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது.
குற்றவாளி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அனில் அம்பானி குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் டெலிகாம் சேர்மன் சதீஷ் சேத் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் தலைவர் ச்சயா விரானி ஆகியோரும் இதில் குற்றவாளிகளாகும்.
சிறை தண்டனை
இன்னும் 4 வாரங்களுக்குள், அனில் அம்பானி மற்றும் 2 இயக்குநர்களும், எரிக்சன் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.453 கோடியை வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால், 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். நான்கு வாரங்களுக்குள் அதாவது ஒரு மாதத்திற்குள், இந்த பணத்தை டெபாசிட் செய்யாவிட்டால், இவர்கள் கூடுதலாக தலா ரூ.1 கோடி அபராதமும் செலுத்த வேண்டிவரும், 1 மாதம் சிறை தண்டனையும் உண்டு. இவ்வாறு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனத்திற்குத்தான் ரபேல் ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.