சென்னை அரசு காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா பரவியது எப்படி.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: சென்னையிலுள்ள அரசு காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்ட விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது உச்சநீதிமன்றம். மேலும், தமிழக அரசு இதில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவர்களில் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. காப்பாளருக்கு முதலில் கொரோனா தொற்று இருந்ததாகவும், ஆனால், அலட்சியமாக இருந்ததால் மற்ற சிறுவர்களுக்கும் தொற்று பரவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை ஊடகத்தின் வாயிலாக அறிந்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது, நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு.
"தமிழ்நாட்டில் உள்ள காப்பகத்தில் 35 குழந்தைகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய விரும்புகிறோம்." என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இந்த அமர்வில் நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், காப்பக வார்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு கூறப்பட்டுள்ளது. எப்படி இது நடந்தது? என்று சரமாரி கேள்வி எழுப்பினர்.
கொரோனா அச்சம்: 7 அட்டைப்பெட்டிகளில் வழக்குகளை தாக்கல் செய்யும் புதிய முறை திருச்சி கோர்ட்டில் அமல்!
இதுகுறித்து வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். காப்பகத்தில் கொரோனா பரவுதல் மற்றும் நிலை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கையை சமர்ப்பிக்க மாநில சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு அடுத்து, ஜூன் 15 அன்று விசாரணைக்கு வரும். கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நாடு முழுவதும், உள்ள காப்பகங்களில் வாழும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பெரிய பிரச்சினையை கவனத்தில் கொண்டு, உயர் நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளிடமிருந்தும் பதில்களைக் கோரி வருகிறது.