கருப்பு பணம்.. ப. சிதம்பரம் மனைவி, மகன், மருமகளிடம் விளக்கம் கேட்கிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் தொடர்பாக, கறுப்பு பணம் தடுப்பு சட்டத்தின் கீழ், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
பிரிட்டன், மற்றும் அமெரிக்காவில், பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் சிதம்பரம் குடும்பம் சொத்துக்கள், வாங்கியதாகவும், வங்கிக் கணக்குகளில் பல கோடி பணம் இருப்பதாகவும், அதன் விபரங்களை, வருமான வரி கணக்கில் தெரிவிக்கவில்லை என்றும், சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதிக்கு எதிராக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கறுப்பு பணம் தடுப்பு சட்டத்தின் கீழ், இவ்வழக்கு தொடரப்பட்டது. இதை கிரிமினல் வழக்காக தொடர அனுமதித்து, வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தில், மூவரும் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதிகள்,மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச், கிரிமினல் வழக்கு தொடர, அனுமதி அளித்து, வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
இந்திய அரசியலில் அரிதான நற்பண்புகளுக்கு உதாரணம் நிர்மலா சீதாராமன்: சசிதரூர் ட்விட்
இதை எதிர்த்து வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு, வந்தபோது, நளினி, கார்த்தி, ஸ்ரீநிதி ஆகியோரிடம் விளக்கம் கேட்ட உச்சநீதிமன்றம், வழக்கை ஒத்தி வைத்தது. அதேநேரம், கிரிமினல் வழக்குகளை ரத்து செய்த ஹைகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.