பின்னாலிருந்து வந்து.. ஜாகிங் சென்ற நீதிபதியை கொன்ற டெம்போ.. உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை
டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் காலையில் ஜாகிங் சென்ற நீதிபதி வாகனத்தை வைத்து மோதச் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் "தானாக முன்வந்து" (suo motu) விசாரணை தொடங்கியிருக்கிறது.
பல்வேறு மாஃபியாக்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நடத்திய நீதிபதி என்பதால் இந்த வழக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
தலைமை நீதிபதி என்வி ராமண்ணா தலைமையிலான பெஞ்ச் தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்ததோடு, நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நீதித்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய பல சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் உள்ள நீதித்துறை சார்ந்த நபர்களின் பாதுகாப்பு பிரச்சினை சரி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
என்னாது.. மறுபடியும் லாக்டவுனா.. சுதாரித்த சுகாதார துறை.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்..!
ஜாகிங் செல்லும்போது கொலை
ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். புதன்கிழமை காலை 5 மணியளவில் வீட்டிலிருந்து சுமார் அரை கி.மீ தூரத்தில் ஜாகிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு டெம்போ சாலையில் டர்ன் எடுத்து வந்து நீதிபதி மீது மோதியது. இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
நீதிபதி ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்தார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
யார் என்று தெரியவில்லை
நீதிபதி யார் என்பது பல மணிநேரங்கள் அடையாளம் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால், அவரது குடும்பத்தினர் நீதிபதியை காணவில்லை என போலீசில் புகாரை அளித்த பிறகுதான் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது நீதிபதி உத்தம் ஆனந்த் என்பதை அறிந்து கொண்டனர்.
மாஃபியா வழக்கு
தன்பாத்தில் நடந்த மாஃபியா கொலைகள் தொடர்பான பல வழக்குகளை நீதிபதி விசாரித்து வந்தார். சமீபத்தில் இரண்டு மாஃபியா ரவுடிகளின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். இந்த கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்டுமிராண்டித் தனம்
இதனிடையே உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் விகாஸ் சிங் இந்த விவகாரத்தில் வாதிடுகையில், இது நீதித்துறை மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்று கூறினார். சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று விகாஸ் சிங் கோரினார். உள்ளூர் போலீஸ் பொதுவாக இதுபோன்ற விஷயங்களில் உடந்தையாக இருப்பார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அறிக்கை
அதேநேரம் இப்போது விசாரணையில் தலையிட விரும்பவில்லை எனக் கூறிய உச்சநீதிமன்றம், ஜார்க்கண்ட் மாநில அரசிடம் இந்த விசாரணை குறித்து அறிக்கை கோரியுள்ளது. ஜார்க்கண்ட் அரசாங்க தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் விசாரணை நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் கோரியுள்ளது.