இது தான் ஜனநாயகமா?- ஜனநாயக படுகொலை.. சுப்ரீம் கோர்டில் காங்கிரஸ்- பாஜக இடையே காரசார வாதம்
டெல்லி: மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய பாஜகவின் வழக்கில் ஆளும் காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ், பாஜக எம்.எல்.ஏ.க்களை கடத்தி, 15 மாத மத்திய பிரதேச காங்கிரஸ் அரசாங்கத்தின் ஸ்திரமின்மைக்கு எதிராக சதி செய்கிறது. அதிகாரத்தை குழப்புவதன் மூலம் பாஜக ஜனநாயகத்தை அழித்து வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது இந்நிலையில் முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 22 எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி உயர்த்தி பதவி விலகினார்.
இதனால் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. 16 எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்படவில்லை. 6 எம்எலஏக்கள் ராஜினாமா ஏற்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியின் பலம் சட்டசபையில் 108 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்எல்ஏக்கள் தேவை என்கிற நிலையில்., காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியுடன் சேர்த்து தற்போது உள்ள உண்மையான ஆதரவு என்பது 99 ஆக உள்ளது. அதேநேரம் பாஜகவின் பலம் 107 ஆக உள்ளது.
16 எம்எல்ஏக்கள்
எனவே தற்போது காங்கிரஸ் கட்சிக்கு உள்ள ஒரே வாய்ப்பு 16 எம்எல்ஏக்களை சமாதானம் செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டளிக்க வைப்பது தான். ஆனால் 16 பேரும் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க மறுத்து பெங்களூருவில் உள்ள ஓட்டலில் பாதுகாப்பாக தங்கி உள்ளனர். இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பது சிக்கல் ஏற்பட்டது.
சட்டசபை ஒத்திவைப்பு
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த 16ம் தேதி ஆளுநர் லால்ஜி டாண்டன் உரையாற்றி பின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் சபாநாயகர் பிரஜழபாதி, கொரோனா வைரஸ் பாதிப்பை காரணம் காட்டி பேரவை கூட்டத்தை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
உச்ச நீதிமன்றம்
சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பாஜகவின் மாநில தலைவருமான சிவராஜ் சிங் கவுகானும் 9 பாஜக எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 16ம் தேதி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி சந்திசூர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேரவையை வரும் 26ம் தேதி வரை ஒத்திவைத்த சபாநாயகரின் முடிவு ஆளுநரின் உத்தரவை மீறுவதாக உள்ளது என்று பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இன்று விசாரணை
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கோரும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானி மனுவுக்கு கமல்நாத் இன்றைக்குள் (புதன்கிழமை) பதில் அளிக்க வேண்டும். இதற்காக சட்டசபை செயலாளர், மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது என்றார்கள். இதைத்தொடர்ந்து வழக்கை இன்றைக்கு (புதன்கிழமை) விசாரிப்பதாக தள்ளிவைத்தனர். இதன்படி இன்று வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சிறைபிடித்தது
அப்போது காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ், "பெங்களூரில் "சிறைபிடிக்கப்பட்ட" எம்.எல்.ஏ.க்களுக்கு மீட்க உச்ச நீதிமன்றம் உதவ வேண்டும். சட்டசபை கூடாத போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது . எம்.எல்.ஏ.க்களை பெங்களூருக்கு கவர்ச்சி மற்றும் பலத்தைப் பயன்படுத்தி கடத்தினார்கள். (பின்னர்) பாஜகவின் மூத்த தலைவர்கள் சபாநாயகர் இல்லத்தை அடைந்து ராஜினாமா கடிதங்களை வழங்கினர். எம்.எல்.ஏக்கள் யாரும் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க வரவில்லை. இதுவே பாஜக இந்த விஷயத்தில் உடந்தையாக இருப்பதை நிரூபிக்கிறது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
பாஜக எம்.எல்.ஏ.க்களை கடத்தி, 15 மாத மத்திய பிரதேச காங்கிரஸ் அரசாங்கத்தின் ஸ்திரமின்மைக்கு எதிராக சதி செய்கிறது. அதிகாரத்தை குழப்புவதன் மூலம் பாஜக ஜனநாயகத்தை அழித்து வருகிறது. ராஜினாமாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆறு எம்.எல்.ஏ.க்களுக்கான இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும். மத்திய பிரதேச ஆளுநர் ர் லால்ஜி டாண்டன் "அரசியலமைப்புக்கு எதிரான வகையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டுள்ளார். நள்ளிரவில் உத்தரவுகளைஅனுப்பி உள்ளார். இது ஒரு ஜனநாயகமா? எம்.எல்.ஏ.க்கள் இங்கே கடத்தப்படுகிறார்கள் என்றார்.
பாஜக வாதம்
இதற்கு பதிலடியாக பாஜக சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை தடுத்து நிறுத்தி உள்ளது. 2018 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வெளியேற்றிய காங்கிரஸ் அவசரகாலத்தின் போது "ஜனநாயக படுகொலைக்கு பொறுப்பாக வேண்டும். காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இருக்க சட்டப்பூர்வ உரிமை இல்லை. அரசியலமைப்பின் தலைவராகவும் , அரசியலமைப்பின் படி அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கு பொறுப்பானராகவும் ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்காக மட்டுமே ஆசைப்படுகிறது என்றார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வு, ராஜினாமா விவகாரத்தை மத்தியப்பிரதேச சபாநாயகர் என்.பி. பிரஜாபதி விசாரிக்க வேண்டும், அவர் "விசாரணை நடத்த கடமைப்பட்டவர்" என்று கூறியது.
சிறைபிடிக்கப்படவில்லை
அத்துடன் கிளர்ச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் விருப்பத்திற்கு எதிராக பெங்களூரில் சிறைபிடிக்கப்படவில்லை என்ற அச்சத்தை நீக்க விரும்புகிறோம். "அவர்கள் எங்கு இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். ஆனால் நிச்சயமாக, அவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தால், அவர்கள் சுதந்திரமான விருப்பத்தில் இருப்பதை நாங்கள் காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம். அப்போது வாதிட்ட, மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் சுதந்திரம் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் ராஜினாமா செய்வது குறித்து சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.