குஜராத் ராஜ்யசபா தேர்தலில் சந்தேகம்.. பதில் சொல்லுங்க! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: குஜராத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு 2 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் தனது பதிலை வழங்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர், குஜராத் எம்எல்ஏக்களால் ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டவர்கள். இப்போது இவ்விருவரும், முறையே, காந்திநகர் மற்றும் அமேதி லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
எனவே ராஜ்யசபாவில் இவர்கள் வகித்து வந்த இரு இடங்களும் காலியாகியுள்ளன. அதற்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்படும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, குஜராத் எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ்பாய் தனானி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், தனித்தனியாக இரு சீட்களுக்கும் தேர்தல் நடத்தினால், எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில் பாஜகவேதான் இரண்டிலும் வெற்றி பெற முடியும். காங்கிரசுக்கு சீட் மறுக்கப்படும். மத்திய அரசு, தேர்தல் ஆணையத்தை தனது நோக்கத்திற்கு பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தாக்கல் செய்த இந்த வழக்கை தீபக் குப்தா மற்றும் சூர்யா காந்த் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இன்று விசாரணைக்கு எடுத்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றம் உடனேயே தள்ளுபடி செய்துவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்காத உச்சநீதிமன்றம், வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வரும் 25ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. 2 இடங்கள் காலியாகுவதன் தன்மை எப்படிப்பட்டது என்பதே, உச்சநீதிமன்றம் முன் வைத்துள்ள கேள்வியாக உள்ளது. வழக்கமானதா, அல்லது வேறு மாதிரியான நிகழ்வா என்று நீதிமன்றம், கேள்வி எழுப்பியுள்ளது.
குஜராத் சட்டசபையில் பாஜக பலம் 100, காங்கிரசுக்கு 71 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே, எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படும் இந்த தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால், பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 1 எம்பியை ராஜ்யசபா அனுப்ப முடியும். தனித்தனியாக தேர்தல் நடத்தினால், பாஜகவே 2 இடங்களையும் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.