வேளாண் சட்டங்கள்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு - விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா?
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்போவதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கெனவே நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவுற்ற நிலையில், 9ஆவது சுற்று பேச்சு 15ஆம் தேதி நடைபெற உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 47-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன. அதே நேரத்தில் சட்டத்தில் திருத்தம் வேண்டுமானால் கொண்டுவரலாம் ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது.
கடும் பனியிலும், மழையிலும் போராடி வரும் விவசாயிகள் 70 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ள விவசாயிகள் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று மிகப்பெரிய டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்தது என்று கேட்டனர். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.
பொறுப்புணர்வு இருந்தால் சட்டங்களை அமல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கூறுங்கள். இப்போதைக்கு நம் ஒவ்வொரிடமும் பொறுப்பு இருக்கிறது.
ரத்த வெள்ளம் பாயாமல் பார்த்துக்கொள்வதில் உச்ச நீதிமன்றம் உள்பட நம் ஒவ்வொருவருக்குமே பொறுப்பு உண்டு. நம் கரங்களில் ரத்தக்கறை எதுவுமே படியக் கூடாது. வன்முறைக்கு இடமளிக்கவே கூடாது. ஒரு தவறான சம்பவம் கூட வன்முறையை வெடிக்கச் செய்துவிடும் என்றும் எச்சரித்தனர்.
குடியரசுத் தினத்தின்று டெல்லி முற்றுகை.. டிராக்டருடன் தயாராகும் பல்லாயிரம் பஞ்சாப் விவசாயிகள்
நாங்கள் வேளாண்மை மற்றும் பொருளாதார நிபுணர்கள் இல்லை. வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திட நீங்கள் முடிவெடுக்கிறீர்களா? அல்லது நாங்கள் உத்தரவிடவா? இங்கே கெளரவப் பிரச்னை எப்படி வந்தது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், போராட்டம் நாளுக்கு நாள் மோசமடைகிறது, ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். தற்கொலைகளும் உயிரிழப்புகளும் நேரிடுவதால் மத்திய அரசு உடனடியாக கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்தச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு முன்பு எந்த வகையான ஆலோசனை நடவடிக்கைகளை எடுத்தீர்கள் என்று தெரியவில்லை. பல மாநில அரசுகளும் எதிர்ப்பு காட்டுகின்றன. பெரும்பான்மையானவர்கள் இந்தச் சட்டங்களை நல்லது என்று கூறும்பட்சத்தில், அதை ஒரு கமிட்டியிடம் சொல்லட்டும். சுமுகத் தீர்வுதான் எங்களது நோக்கம் என்று வறிய நீதிபதிகள், போராடுவதற்கு உரிமை உண்டு. காந்திஜியின் சத்யாகிரகம் போல போராடுவதற்கு உரிமை உண்டு. இந்தப் போராட்டத்தை அமைதியாக நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என தலைமை நீதிபதி பாப்டே எச்சரித்தார். மேலும், விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்காக, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கெனவே நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவுற்ற நிலையில், 9ஆவது சுற்று பேச்சு 15ஆம் தேதி நடைபெற உள்ளது.