புதுச்சேரி ஆளுநரின் பாஜக எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
Recommended Video
டெல்லி : புதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்களை நியமனம் செய்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. நியமனத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், யூனியன் பிரதேசம் என்பது மத்திய அரசு சொத்து என்றும் தெரிவித்தது.
புதுச்சேரி அரசின் பரிந்துரையின்றி ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசு நியமனம் செய்த பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்களை சபாநாயகர் வைத்திலிங்கம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. அதனால் அவர்கள் நீதி மன்றத்தை நாடினர். நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, சட்டசபைக்குள் தங்களை அனுமதிக்க வலியுறுத்தி தீர்ப்பு நகலுடன் நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் சபாநாயகர் வைத்திலிங்கத்தைச் சந்தித்து மனு அளித்தனர். இருப்பினும், தம்மிடம் கருத்துகேட்காமல் வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்க முடியாது என்று மார்ச் 25ம் தேதி அவர் மறுத்து உத்தரவிட்டார்.
அதற்கு மறுநாளான மார்ச் 26-ம் தேதி தொடங்கிய இடைக்கால சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவும், பேரவைக்குள் வரவும் தடை விதித்து வைத்திலிங்கம் உத்தரவிட்டார். நியமன எம்எல்ஏக்கள் எவ்வளவோ போராடியும் பேரவைக்குள் செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து முதல்வரின் நாடாளுமன்ற செயலரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான லட்சுமிநாராயணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஏ.கே சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்றும், அது மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளது என்றும் வாதிட்டார். மேலும், யூனியன் பிரதேசம் என்பது, மத்திய அரசின் சொத்து என்பதால், மத்திய அரசின் அதிகாரம் அங்கு செல்லுபடியாகும் எனறும் கூறினார்.
முன்னதாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அரசியல் சட்டம் மத்திய அரசுக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கவில்லை என்றார். இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர்.
அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலின் வாதத்தை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும், புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்றும் உத்தரவிட்டனர். இறுதியாக நியமனத்தை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.