சாரதா சிட் பண்ட்.. மாஜி கமிஷனர் ராஜீவ் குமாருக்கு சிக்கல்.. கைது செய்ய தடை நீக்கியது உச்சநீதிமன்றம்
டெல்லி: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள், போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு வழங்கிய சட்ட பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கிய சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த முயன்ற போது, அதை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் பெரும் தர்ணா போராட்டத்தை முன்னெடுத்தார்.
கோட்சே ஒருவரைதான் கொன்றார்.. ராஜிவ் காந்தி கொன்றது 17,000 பேர்.. பாஜக எம்.பி பகீர் ட்வீட்
தடுத்த காவல்துறை
முன்னதாக, ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்ற போது, அவர்களை கொல்கத்தா காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, விசாரணை செய்வதற்கு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்ற பரபரப்பு சம்பவமும் அரங்கேறியது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்கு விசாரணையின் போது ராஜீவ் குமாரை கைது செய்து விசாரிக்க, அனுமதி தேவைப்படுகிறது என்று சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக இருந்தவர் ராஜீவ் குமார். அப்போது வழக்கின் முக்கிய ஆதாரங்களை அழித்தார். இது தொடர்பாக உரிய ஆதாரங்கள் இருக்கிறது என்று சிபிஐ வாதத்தை முன் வைத்தது.
சிபிஐக்கு இடைக்கால தடை
தனிப்பட்ட முறையில், அவமானபடுத்தும் நோக்கத்துடன்தான் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ விரும்புவதாக, ராஜீவ் குமார் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 5ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு சிபிஐ இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.
ஹைகோர்ட்டில் முன் ஜாமீன்
இந்த நிலையில் வழக்கு விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது ராஜ்குமாரை கைது செய்ய கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை 7 நாட்களுக்குள் ராஜீவ் குமார் அணுகிக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ராஜ்குமார் முன்ஜாமீன் கேட்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.