லோக்சபா தேர்தல்களில் தோல்வியையே தழுவாதவர்.. கொரோனாவை வெல்ல முடியாமல் காலமானார் சுரேஷ் அங்காடி!
டெல்லி: லோக்சபா தேர்தல்களில் தோல்வியையே தழுவாதவர் என்ற பெருமைக்குரியவர் கொரோனா காவு கொண்ட மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி.
கர்நாடகாவின் பெல்காம் பகுதியை பாஜகவின் கோட்டையாக கட்டியெழுப்பியவர்களில் சுரேஷ் அங்காடியும் முக்கியமானவர். லிங்காயத் ஜாதியைச் சேர்ந்த சுரேஷ் அங்காடி, 1996-ல் பெல்காம் மாவட்ட பாஜக துணைத் தலைவரானார். 2001-ல் பெல்காம் மாவட்ட பாஜக தலைவரானார்.
பெல்காம் மாவட்ட தலைவராக 3 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் 2004 லோக்சபா தேர்தலில் முதல் முறையாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதைய சிட்டிங் எம்.பியாக காங்கிரஸ் கட்சியின் அமர்சிங்க் பாட்டீலை தோற்கடித்தார் சுரேஷ் அங்காடி. சுதந்திரப் போராட்ட தியாகியான புகழ்பெற்ற அரசியல்வாதி வி.ஆர். பாட்டீலின் மகன்தான் அமர்சிங்க்.
2009 லோக்சபா தேர்தலில் பாட்டீலை வீழ்த்தினார் சுரேஷ் அங்காடி. 2014-ல் மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார் சுரேஷ் அங்காடி. அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி லட்சுமி ஆர் ஹெப்பால்கரை நிறுத்தியது. அப்போதைய மோடி அலையில் லட்சுமியும் தோல்வியைத் தழுவினார்.
கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்
2019 லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார் சுரேஷ் அங்காடி. காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ். சுதுன்னவாரை தோற்கடித்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சரானார் சுரேஷ் அங்காடி.
பெல்காம் தொகுதியில் இருந்து மொத்தம் 4 முறை லோக்சபா தேர்தலில் வென்றவர் சுரேஷ் அங்காடி. இதுவரை ஒரு தேர்தலிலும் தோல்வியைத் தழுவாதவர். இப்போது கொரோனாவை வெல்ல முடியாமல் காலமாகிவிட்டார்!