இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் - ஏப்.13ல் பதவியேற்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமையன்று அவர் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார்.
டெல்லி: இந்திய தேர்த்ல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுனில் அரோராவின் பதவிகாலம் இன்றுடன் முடிவடைகிறது. சுனில் அரோராவிற்கு அடுத்த உயர்பதவியில் உள்ள சுஷில் சந்திரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஏப்ரல் 13ஆம் தேதியன்று பதவியேற்க உள்ளார்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம்,மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநில தேர்தல்களை நடத்தி முடித்துள்ள சுனில் அரோரா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். மே 2ஆம் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிக்கப்படும் போது தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார் சுஷில் சந்திரா.
ஐந்து மாநில தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தொடர் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அதே சமயம், கடந்த மாதம் கொரோனா தடுப்பூசியையும் அவர் செலுத்திக்கொண்டார். இருப்பினும், சுஷில் சந்திராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 3ல் நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31க்கு மாற்றம்
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக் காலம் 2022ம் ஆண்டு மே 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அவருடைய தலைமையில், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.
இதில் கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளின் ஆட்சிக் காலம் அடுத்தாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. அதேபோல் உத்தரபிரதேச மாநில சட்டசபையின் காலம் அடுத்தாண்டு மே 14ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவராக சுஷில் சந்திரா பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.