ஆந்திரா ஆளுநர் நானா.. சும்மா கிளப்பி விட்டுட்டாங்க.. சுஷ்மா விளக்கம்.. மத்திய அமைச்சருக்கு 'பல்பு'
டெல்லி: ஆந்திர மாநில ஆளுநராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
கடந்த மோடி ஆட்சி காலத்தின்போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சுஷ்மா ஸ்வராஜ். ஆனால் கிட்னி பிரச்சினை காரணமாக சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் சுஷ்மா சுவராஜ் விலகியிருந்தார்.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. மத்திய அமைச்சரவை பதவியேற்பின்போது, சுஷ்மா ஸ்வராஜுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. உடல்நிலை பிரச்சினை காரணமாகத்தான் அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று பாஜக வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்ததாக, இன்று இரவு சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆளுநராக நரசிம்மன் பதவி வகித்து வருகிறார். எனவே, நரசிம்மனை தெலுங்கானாவுக்கு மட்டும் ஆளுநராக தொடரச் செய்துவிட்டு, ஆந்திர மாநில, ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவித்தன.
அதேநேரம், குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து, அதிகாரப்பூர்வமாக அது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், திடீரென மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இன்று இரவு ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார்.
அதில், ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், தெரிவித்து இருந்தார் ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த ட்வீட்டை அவர் நீக்கி விட்டார்.
I called on the Vice President of India Shri Venkaiah Naidu ji on demitting office as Minister of External affairs. This was enough for Twitter to appoint me as the Governor of Andhra Pradesh.
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 10, 2019
இதன்பிறகு சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், இதற்கு விளக்கம் அளித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சக பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வது தொடர்பாக, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்ததாகவும், அதற்குள், ட்விட்டரில் தன்னை, ஆந்திரா முதல்வராக நியமித்துவிட்டனர் எனவும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
The news about my appointment as Governor of Andhra Pradesh is not true.
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 10, 2019
ஆந்திரா ஆளுநராக தன்னை நியமித்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், சுஷ்மா தனது மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இதனால் பரபரத்த செய்திகள் முடிவுக்கு வந்தன.