இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பும் பாகிஸ்தானை கைவிட்டது.. இந்தியாவிற்கு சிறப்பு கவுரவம்
டெல்லி: பாகிஸ்தானின் எதிர்ப்பையும் மீறி இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) மாநாட்டில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து சுஷ்மா சுவராஜ் இன்று அபுதாபி புறப்பட்டுச் செல்கிறார்.
இஸ்லாமிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற விவகாரங்களுக்காக, 1969ம் ஆண்டு உருவாக்கப்பட்டது 'இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு' என்பதாகும்.
இதன் வருடாந்திர மாநாடு நாளை, மார்ச் 1 மற்றும் நாளை மறுநாள், மார்ச் 2ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. முதல்முறையாக இந்திய அமைச்சர் ஒருவரை இந்த அமைப்பு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தது.
அந்த அமைச்சர், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ்தான்.
பாகிஸ்தான் எதிர்ப்பு
ஆனால், இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள பாகிஸ்தான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நடுவே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், சுஷ்மா ஸ்வராஜை இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அழைத்தால், பாகிஸ்தான் இந்த நிகழ்வில் பங்கேற்காது என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்தார்.
ஐக்கிய அரபு நாடுகள்
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ஷா. ஆனால் இதையெல்லாம் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு பொருட்படுத்தவில்லை. எனவே சுஷ்மா சுவராஜ் இன்று திட்டமிட்டபடி அபுதாபி புறப்பட்டுச் செல்கிறார்.
இந்தியாவின் ஆளுமை
இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியாவின் சர்வதேச அரசியல் ஆளுமை, அந்த நாட்டின் கலாச்சார செழுமை மற்றும் இஸ்லாமிய பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம்களுக்கு அங்கீகாரம்
இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் நட்பை இன்னும் பலப்படுத்துவதற்கான முயற்சியாக இந்த அழைப்பை நாங்கள் கருதுகிறோம். இந்த நட்பை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கு விரும்புகிறோம். இந்தியாவில் உள்ள 185 மில்லியன் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாக இதை நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.