அரசு பங்களாவை காலி செய்துவிட்ட சுஷ்மா ஸ்வராஜ்.. முன்னுதாரணமாக இருப்பதாக குவியும் பாராட்டு
டெல்லி: முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், தனக்கு வழங்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் மோடி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சுஷ்மா ஸ்வராஜ். மோடியின் முந்தைய ஆட்சியில் சுஷ்மா ஸ்வராஜ் லைமையிலான இந்திய வெளியுறவு துறை சிறப்பாக செயல்பட்டது.
குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும், அது குறித்து சுஷ்மாவின் ட்விட்டரில் தொடர்பு கொண்டால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆபத்து மற்றும் பிரச்சனைகளில் சிக்கி தவித்த பல்வேறு வெளிநாடு வாழ் இந்தியர்கள், சுஷ்மாவின் முயற்சியால் பல்வேறு இக்கட்டிலிருந்து வெளிவந்து தாயகம் திரும்பியுள்ளனர்.
எனவே என வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் சுஷ்மா ஸ்வராஜ்க்கு மிகுந்த நற்பெயர் உண்டு. வெளியுறவு அமைச்சராக சுஷ்மா பதவி வகித்த போது வெளியுறவுத்துறை செயலராக இருந்த ஜெய்சங்கர் தான், தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
டி.ஆர்.பாலுவை மாமா என்று தான் சொல்லுவேன்.. உதயநிதி ஸ்டாலின் உருக்கம்
இந்நிலையில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் கடந்த மாதம் ஆட்சி பொறுப்பை ஏற்றது. மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் பதவி ஏற்றார். மோடியுடன் சேர்ந்து 57 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். ஆனால் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிடவில்லை.
உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வு தேவைப்படுவதால், அவர் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டார். மேலும் அமைச்சராக பதவி வகித்த போதே சில நாட்கள் அவர் தீவிர சிகிச்சையில் இருந்தார். எனவே தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால், நிச்சயம் மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்கும் சூழல் ஏற்படும்.
எனவே தான் முற்றிலுமாக தேர்தல் களத்திலிருந்து அவர் விலகிவிட்டார். இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்று 1 மாதம் கழிந்த நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சுஷ்மா ஸ்வராஜ், டெல்லியில் தான் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்துள்ளார்.
I have moved out of my official residence 8, Safdarjung Lane, New Delhi. Please note that I am not contactable on the earlier address and phone numbers.
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 29, 2019
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், தான் வசித்து வந்த அரசு வழங்கிய அதிகாரப்பூர்வ வீடான 8, சஃப்தர்ஜங் லேன், புதுடெல்லி என்ற முகவரியிலிருந்து வெளியேறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசு பங்களாவை காலி செய்துள்ளதால் முந்தைய முகவரி மற்றும் தொலைபேசி எண்களில், என்னை இனி தொடர்பு கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு பொறுப்புகள் எதிலும் இல்லை என்றாலும் அரசு வழங்கிய பங்களாவை காலி செய்ய மறுத்து, வருடக்கணக்கில் டேரா போடும் பல்வேறு அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு மத்தியில், சுஷ்மா தனது செயல் மூலம் முன்னுதாரணமாக திகழ்வதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.