சுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்
டெல்லி: சுதேசி கொள்கை என்றால் வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என புரிந்து கொள்ள தேவை இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் பிரதமர் மோடி தற்சார்பு கொள்கையை வலியுறுத்தி வருகிறார். அண்மையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 101 ராணுவ சாதனங்கள், தளவாடஙக்ளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாகவும் இது தற்சார்பு கொள்கையை வலிமையாக்கும் என கூறியிருந்தார்.
இதனிடையே இணையவழி புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சுதேசி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். மோகன் பகவத் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு வெளிநாட்டுப் பொருளையும் புறக்கணிப்பதுதான் சுதேசி என்பது அர்த்தம் அல்ல. ஒருநாட்டில் குறிப்பிட்ட தொழில்நுட்பம் அல்லது பொருட்கள் கிடைக்காமல் போகும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
கொரோனா லாக்டவுன் காலமானது, உலகமயமாக்கல் கொள்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஒற்றை பொருளாதார மாதிரி என்பது அனைத்து காலங்களுக்கும் பொருந்தக் கூடியதாக இல்லை. வெளிநாடுகளின் பொருட்களை புறக்கணிப்பதற்கு பதில் உள்நாட்டில் அவற்றை மேம்படுத்துவதற்கு நாம் முன்னுரிமை தரவேண்டும்.
மருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது!
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் தொழில்நுட்பத்தை நமது தேசத்திற்கேற்ப மறுவடிவமைப்பு செய்து கொள்ள வேண்டும். சுதந்திரத்துக்குப் பின்னர் நமது தேசத்தின் கொள்கைகள் மேற்கத்திய நாடுகளால்தான் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டுப் பொருட்கள், தொழில்நுட்பத்தை மேற்கத்திய பொருட்கள் அழித்துவிட்டன.
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையானது தற்சார்பு பொருளாதாரத்தை முன்னிறுத்துகிறது. அந்த நோக்கம் மிக சரியானது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.