ஆக்ஷனில் இறங்கியது மத்திய அரசு.. மத்திய ஆயுதப்படை கேண்டீன்களில் உள்நாட்டு பொருட்கள் மட்டுமே விற்பனை
டெல்லி: மத்திய ஆயுத போலீஸ் படைகளின் (சிஏபிஎஃப்) அனைத்து கேண்டீன்களிலும் ஜூன் 1 முதல் உள்நாட்டு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடியாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 2800 கோடி மதிப்புள்ள பொருட்கள் இந்த கேண்டீன்களிலிருந்து வாங்கப்படுகின்றன என்பதால் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு, தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, உள்நாட்டு பொருட்களை மக்கள் வாங்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று கோரிக்கை விடுத்தார். தற்சார்பு பொருளாதாரம்தான் நாட்டை வருங்காலத்தில் உயர்த்தும் என்றும், இந்தியா தற்சார்பு அடைந்தால், பிற நாடுகளுக்கு நல்லதுதான் என்றார்.
இந்த நிலையில்தான், மத்திய உள்துறை அமைச்சகம், மறுநாளே, இப்படி ஒரு முடிவை எடுத்து, முன் உதாரணமாக மாறியுள்ளது.
மீண்டும் ஒரு பொருளாதார புரட்சி.. நரசிம்மராவ் பாணியில் களமிறங்கும் மோடி.. வருமா அதிரடி மாற்றம்?
நரேந்திர மோடி கோரிக்கை
உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்த அறிவிப்பை ஹிந்தி மொழியில், ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை நீங்கள் அதிகபட்சமாக தயாரிக்க வேண்டும் என்று நான் பொதுமக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் தயாரிப்புகளைத் தேர்வுசெய்ய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்குப் பின்னர் உள்துறை அமைச்சகத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஷா கூறினார்.
ஆயுதப்படை கேன்டீன்
"அனைத்து மத்திய ஆயுத போலீஸ் படைகள் (சிஏபிஎஃப்) கேன்டீன்கள் இனி உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது 2020 ஜூன் 1 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து சிஏபிஎஃப் கேன்டீன்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் சுமார் 50 லட்சம் குடும்ப உறுப்பினர்கள் 10 லட்சம் சிஏபிஎஃப் பணியாளர்கள் உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துவார்கள், " என்றார் அமித் ஷா.
பல கோடி பொருட்கள்
சிஏபிஎப்கள் - சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, என்எஸ்ஜி மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றுக்கான கேன்டீன்கள் இணைந்து ஆண்டுக்கு சுமார் 2,800 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்கின்றன. எனவே இது முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது. மாநில போலீஸ் கேன்டீன்களிலும் இதுபோன்ற முடிவு எடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது.
தன்னிறைவு
நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை அதிகபட்சமாகப் பயன்படுத்தவும், மற்றவர்களும் இதைச் செய்ய ஊக்குவிக்கவும் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஒவ்வொரு இந்தியரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை (சுதேசி) பயன்படுத்துவதாக உறுதியளித்தால், நமது நாடு ஐந்து ஆண்டுகளில் தன்னிறைவு பெற முடியும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால், முழுக்க தற்சார்பு என்பது நடைமுறையில் சாத்தியப்படுமா என்பதே பொருளாதார அறிஞர்கள் கேள்வியாக உள்ளது.