தலைநகர் டெல்லியை அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல்… இதுவரை 6 பேர் பலி
டெல்லி: தலைநகர் டெல்லியில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி முதல் இன்று வரையிலான காலங்களில் தலைநகர் டெல்லியில் 2835 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 வாரங்களில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 870 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டும் டெல்லியைச் சேர்ந்தவர் என்றும் மற்ற ஐந்து பேர்கள் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பாஜக கண்டுபிடித்த யுக்தியை பாருங்க.. ப.சிதம்பரம் காட்டம்
அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை இயக்குனரகம் கூறியுள்ளது.
'எச்1என்1 - இன்ஃப்ளுயன்சா வைரஸ்' கிருமிகளால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் 5 நாட்களுக்குள் காய்ச்சல் முழுவதுமாக குணமாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு பன்றிக்காய்ச்சலை கொடிய நோய் என்று அறிவித்த உலக சுகாதார நிறுவனமே, தற்போது பருவ காலங்களில் காணப்படும் சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என அறிவித்துவிட்டது. பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து மக்கள் அச்சம், பயம் மற்றும் பீதி அடைய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.