"இது ஆபத்து".. இந்துக்களுக்கு முன் நமாஸ் செய்த பாக் வீரர்.. யூனிஸ் பரபர கருத்து.. விளாசிய போக்லே!
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் மேட்ச் முடிந்து 4 நாட்கள் ஆகிவிட்டாலும் இன்னும் அந்த போட்டி குறித்த சர்ச்சைகள் மற்றும் விவாதங்கள் அடங்கவில்லை. இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் தோல்வி அடைந்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மைதானத்திலேயே தொழுகை மேற்கொண்டார். இரவு நேரம் செய்ய வேண்டிய தொழுகையை நேரம் தவறாமல் மேற்கொண்டார்.
இந்த காட்சி பார்க்க ரம்மியமாக இருந்தது. வீரர் ஒருவர் நடு மைதானத்தில் இப்படி தொழுகை செய்தது அழகான காட்சியாகவே இருந்தது. ஆனால் இந்தியாவை சேர்ந்த சிலர் இதை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் வெற்றி இஸ்லாமின் வெற்றி.. சொல்வது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்
என்ன?
ஏன் இப்படி தொழுகை செய்ய வேண்டும் என்பது போல சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சர்ச்சையில் மேலும் எண்ணெய் ஊற்றும் வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்று தெரிவித்து உள்ளார். அதில், பல லட்சம் இந்துக்களுக்கு முன் ரிஸ்வான் நமாஸ் செய்தார். அது எனக்கு ஸ்பெஷல் விஷயமாக இருந்தது.
பாகிஸ்தான்
இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை விட அதுதான் அதிக ஸ்பெஷல் விஷயமாக எனக்கு பட்டது, என்று வாக்கர் யூனிஸ் அந்த டிவி நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். முன்னாள் பாக் வீரர் சோயப் அக்தர் இந்த நிகழ்ச்சியில் உடன் இருந்தார். வாக்கர் யூனிஸ் சொன்ன இந்த கருத்து பெரிய சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் காரணமாக இணையத்தில் பல மோதல்கள் நடக்கும் நிலையில் இப்படி பேசலாமா என்று வாக்கர் யூனிசை பலர் விமர்சனம் செய்துள்ளனர்.
Recommended Video
ஹர்ஷா போக்லே
இந்த நிலையில் வாக்கர் யூனிசை கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே விமர்சனம் செய்துள்ளார். ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ள கருத்தில், வாக்கர் யூனிஸ் போன்ற பெரிய முன்னாள் வீரர்கள் ரிஸ்வானின் தொழுகை குறித்து இப்படி கருத்து தெரிவிப்பது அதிகம் கவலை அளிக்க கூடிய, ஏமாற்றம் அளிக்க கூடிய ஒரு விஷயம். நாம் இது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை புறந்தள்ளிவிட்டு முடிந்த அளவு கிரிக்கெட் பற்றி பேச முயன்று கொண்டு இருக்கும் போது இவர் இப்படி கருத்து தெரிவிப்பது மோசமானது.
கிரிக்கெட்
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் போட்டிக்கு சர்வதேச அளவில் தூதுவர்களாக இருப்பவர்கள் இன்னும் கொஞ்சம் நாகரீகமாக, பொறுப்புடன் இருக்க வேண்டும். வாக்கர் யூனிஸ் இது குறித்து மன்னிப்பு கேட்பார் என்று நம்புகிறேன். நாம் கிரிக்கெட் மூலம் ஒன்றாக இணைய வேண்டும். மாறாக மதத்தை காரணம் காட்டி பிளவுபட கூடாது.
ஆபத்து
பாகிஸ்தானில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த கருத்துக்கு பின் இருக்கும் பிரச்னையை, இது ஆபத்து என்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன். அவர்களும் என்னுடைய கருத்தோடு ஒத்துப்போவார்கள் என்று நம்புகிறேன். இது வெறும் கிரிக்கெட் போட்டிதான். இது வெறும் மேட்ச்தான் என்பதை இவர்கள் உணர வேண்டும், என்று ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.