இனிமே பார்த்துப் பேசுங்க சார்.. யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த வலிக்காத வார்னிங்!!
டெல்லி: பிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும் என யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது அவர் பேசுகையில் காங்கிரஸ் கட்சியினர் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள்.
ஆனால் பிரதமர் மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும் துப்பாக்கி குண்டுகளையும் பரிசாக வழங்குகிறார். இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது என்று யோகி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து யோகி ஆதித்யநாத்தின் பேச்சு அடங்கிய வீடியோவை அளிக்குமாறு காசியாபாத் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அனுப்பப்பட்ட வீடியோவை ஆணையம் ஆய்வு செய்தது.
பின்னர் தனது பேச்சுக்கு விளக்கம் கேட்டு யோகி ஆதித்யநாத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவரும் விளக்கக் கடிதம் அளித்தார். எனினும் அது திருப்தி அளிக்கவில்லை என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
எதிர்காலத்தில் யோகி இதுபோல் இனி பேசக்கூடாது. வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ள தேர்தல் ஆணையம் அவரது பேச்சுக்காக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.