கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி
டெல்லி: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தாலும், மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் வாய்ப்பு கிடையாது என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சி விரைவில் கவிழ்ந்து விடும் என பாஜக தலைவர்கள் அடிக்கடி கூறி வந்தனர். இந்நிலையில் முன்னாள் பிரதமரும், மஜத கட்சி தேசிய தலைவருமான தேவகவுடாவும் அதே கருத்தை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூட்டணி ஆட்சியை பாதுகாக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் டெல்லி மேலிடம் செயலிழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ள தேவகவுடா, கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என தெரியாது என கூறியது மதநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கர்நாடக அரசியல் சூழல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, மாநிலத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சி கவிழ்வது உறுதி என்றாலும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றார்.
டெல்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சதானந்த கவுடா, கர்நாடக மாநிலத்தில் அதிகாரத்தின் மீது ஆசையுள்ள கட்சிகளின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறதே தவிர, மக்களுக்கான ஆட்சி நடைபெறவில்லை என சாடினார்.
அமைச்சரவை விரிவாக்கம், வாரியம் மற்றும் கழக தலைவர்களின் நியமனம் உள்ளிட்ட பணிகள் உரிய காலத்தில் நடைபெறவில்லை. காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் தங்களின் ஆதங்கத்தை தற்போது தான் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மஜதவின் தேசிய தலைவரான தேவகவுடா, முன்பு பாஜகவுடன் ஆட்சியமைத்த போது பல்வேறு நெருக்கடிகளை அளித்தார். தினந்தோறும் ஒரு கடிதம் எழுதினார்.
எங்களை நெருக்கடிக்குள்ளாக்கியது போலவே, தற்போது காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடி கொடுத்து வருகிறார். ஆட்சி அதிகாரம் மஜத கட்சியின் கைகளில் கிடைத்த பிறகு, தற்போது தான் தேவகவுடா தனது உண்மையான முகத்தை காண்பித்துள்ளார் என குறிப்பிட்டார் சதானந்த கவுடா.
காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைந்த நாள் முதலே பிரச்சனையாக தான் உள்ளது. ஓராண்டிற்கு பிறகு ஆட்சி விவகாரத்தில் நெருக்கடி இருப்பதாகவும், அதே நேரம் கர்நாடக சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார் தேவகவுடா.
அவரது இந்த பேச்சு சுயநலம் உடையது. தேவகவுடாவிற்கு கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஒருவேளை விரைவிலேயே கூட்டணி ஆட்சி கவிழ்ந்தாலும், அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதே நேரம் கர்நாடகத்தில் 105 இடங்களில் பாஜக வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உள்ளது
எனவே கூட்டணி ஆட்சி கவிழ்ந்தாலும் மாநில பேரவைக்கு 100 சதவீதம் இடைத்தேர்தல் நடைபெறாது என்று சதானந்த கவுடா உறுதிபட கூறியுள்ளார்.