எல்லை மோதல்: இந்தியா- சீனா பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை!
டெல்லி: எல்லை மோதல்கள் தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தையிலும் ராணுவ தளபதிகள் இடையேயான பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்கின்றன தகவல்கள்.
லடாக்கின் கிழக்கில் கல்வான் (கால்வன்) பள்ளதாக்கில் இந்தியா, சீனா வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகினர்.
சீனாவின் அத்துமீறலுக்கு உரிய பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் முப்படையும் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்ப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன் புதன்கிழமை மாலை தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சீனாவின் முன்கூட்டியே திட்டமிட்ட செயலால்தான் இந்தவிளைவு ஏற்பட்டது என அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
சீனாவுக்கு பதிலடி தருவதில் தீவிரம்- மலாக்கா ஜலசந்தியில் போர்க் கப்பல்கள்- தயார் நிலையில் விமானப் படை
Recommended Video
இப்பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட்ட செய்திக் குறிப்பில், இருதரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த மோதல் என அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் சீனா வெளியுறவு அமைச்சகமோ, இந்தியா ராணுவ வீரர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் இருநாடுகளின் ராணுவ தளபதிகளும் நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்கின்றன ராணுவ வட்டாரங்கள்.