அஞ்சலக தேர்வில் தமிழ் புறக்கணிப்பு.. நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்பி-க்களின் எதிர்ப்பு குரல்
டெல்லி: மாநில மொழியை புறக்கணித்து விட்டு நேற்று தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ள தபால் துறை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக ஒருசேர குரலெழுப்பியுள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் தபால் துறை ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதில் அறிவிக்கப்பட்டபடி காலையில் நடைபெற்ற முதல் தாளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் இருந்ததால், கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியோர் கூறினர்.
ஆனால் மதியம் நடைபெற்ற இரண்டாம் தாள் எதிர்பார்த்தபடி தமிழில் இருந்ததால், எளிதாக இருந்ததாக கூறினர். எனினும் தேர்வு முடிவிகளை வெளியிட கூடாது, அது நீதிமன்ற தீர்ப்பிற்குட்ப்டது என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.
தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தை மாநிலங்களவையில் அதிமுக எழுப்பியது. போட்டி தேர்வுகளில் ஒரு மாநிலத்தின் மொழி புறக்கணிக்கப்பட்டால், கிராமப்புற இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுவார்கள் என அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் கவலை தெரிவித்தார்.
ஆகவே நேற்று நடைபெற்ற தபால்துறை தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தேர்வு நடத்தப்பட்டது கிராமப்புற தபால் நிலையங்களில் உள்ள பதவிகளுக்கு தான். ஆனால் கேள்வி ஆங்கிலத்தில் இருந்தது என குறிப்பிட்டார்.
எதுவும் பேசப்படாது.. தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பூட்டு.. கட்சியில் இருந்து ஒதுங்குகிறாரா உசேன்?
தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு திமுக எம்பி திருச்சி சிவாவும் தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார். தமிழக எம்பி-க்களின் கருத்துகளை கேட்டு கொண்ட மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு, உறுப்பினர்களின் கருத்துகள் உரிய அமைச்சர்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதே போல இவ்விகாரம் தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு தபால்துறை தேர்வின் கேள்வி தாளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார். 2013-ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில், மத்திய அரசு பணிகளுக்கான பொதுத்தேர்வில் ஆங்கிலத்துடன் மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் இடம்பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சியில் தபால்துறையில் காலியாக உள்ள 986 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இடம்பெற்றன. ஒரு மாநிலத்தின் மொழியை அதே மாநிலத்தில் மத்திய அரசு புறக்கணித்திருப்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும் என ஆவசேமாக கேட்டார் .
அரசு விதி அரசு அறிவிக்கை என அனைத்தும் இருந்தும் எதுவுமே இவ்விகாரத்தில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டினார்.