நெக்ஸ்ட்க்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆவேசம்.. காந்தி சிலை முன் போராட்டம்
டெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவப்படிப்பில் சேர மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அப்படி எழுதி எம்பிபிஎஸ் படித்து முடிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் மருத்துவராக அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் அகில இந்திய அளவில் நெக்ஸ்ட் என்ற தேர்வை எழுத வேண்டும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய நெக்ஸ்ட் தேர்வு அறிவிப்புக்கு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு அறிவித்துள்ள நெக்ஸ்ட் என்ற தேர்வை கண்டித்தும், நீட் நுழைவு தேர்வை கண்டித்தும் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தமிழக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு நெக்ஸ்ட் தேர்வு அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி திமுக காங்கிரஸ் விசிக மற்றும் இடது சாரி எம்பிக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக எம்பிக்கள் நீட் தேர்வை நிறுத்துங்கள், மாநில சுயாட்சிக்கு மதிப்பு கொடுங்கள்,நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்யுங்கள் உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்றத்தின் காந்தி சிலை முன்பு பரபரப்பு நிலவியது. இதற்கிடையே கர்நாடக பிரச்சனையை விவாதிக்க வலியுறுத்தி லோக்சபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரிய அளவில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்னதாக எம்பிபிஎஸ் மாணவர்களை நெக்ஸ்ட் தேர்வை எழுத வலியுறுத்தும் மத்திய அரசின் புதிய மருத்துவ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மசோதா நாடாமன்றத்தின் நிலைகுழுவில் இருக்கிறது.