மகாராஷ்டிரா.. கேரளாவைவிட அதிகப்படியான பாதிப்பு நம்ம தமிழகத்தில் தான்.. அதிரவைக்கும் புள்ளி விவரம்
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மிக குறைவான அளவே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வெறும் 5631 பேருக்குத்தான் இதுவரை கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 13 சதவீதம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video
இந்தியாவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை மத்திய சுகாதார அமைச்சகத்தின் கணக்குப்படி 5734 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 166 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1018 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 64 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 738 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது.
ஆர்ப்பாட்டமின்றி கொரோனா நிவாரண உதவி... உதவிக்கு எந்நேரமும் அழைக்கலாம் -அன்பில் மகேஷ்
1135 பேருக்கு கொரோனா
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று யாருக்கு உள்ளது என்பதை பரிசோதனை செய்வதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 25753 பேருக்கு பரிசோதனை நடத்தி உள்ளது. அங்கு 1135 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது 4.41 சதவீதம் ஆகும். மகாராஷ்டிராவில் 10 லட்சம் பேருக்கு 165 என்ற அளவில் கொரோனா பரிசோதனை நடந்திருக்கிறது.
கேரளாவில் பாதிப்பு
இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் மிக அதிகமான பரிசோதனை நடந்துள்ளது. கேரளாவில் 11252 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் 345 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்த பாதிப்பு என்பது வெறும் 3.07 சதவீதம் ஆகும். அதாவது அந்த மாநில சராசரி படி பார்த்தால் கேரளாவில் 10 லட்சம் பேருக்கு 319 பேருக்கு சோதனை செய்யப்பட்டிருக்கிறது.
எவ்வளவு சோதனை
கர்நாடகாவில் இதுவரை 6654 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 181 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெறும் 2.72 சதவீத பாதிப்பு ஆகும். கர்நாடகாவில் மாநில சராசரி மக்கள் தொகைப்பபடி பார்த்தால் 10 லட்சம் பேருக்கு 100 பேர் என்ற அளவில் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பாதிப்பு அதிகம்
தமிழகத்தில் இதுவரை 5631 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என்று பரிசோதனை நடந்திருக்கிறது. இதில் 738 பேருக்கு கொரோனா இருப்பதாக பாசிட்டிவ் வந்துள்ளது. இது மொத்த சதவீதத்தில் பார்த்தால் 13.11 சதவீத பாதிப்பு ஆகும். அதாவது தமிழகத்தின் மக்கள் தொகை சராசரி என்று பார்த்தால் 10 லட்சம் பேரில் 74 பேருக்குத்தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
எவ்வளவு சோதனை
ஆந்திராவில் 5612 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் 348 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சதவீதத்தில் 6.20 சதவீதம் ஆகும். . அதாவது மாநில மக்கள் சராசரி என்று பார்த்தால் 10 லட்சம் பேரில் 114 பேருக்கு ஆந்திராவில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
நான்கு தென் மாநிலங்கள்
மேலே சொன்ன நான்கு மாநிலங்களில் மகாராஷ்டிராவை தவிர மற்ற 4 மாநிலங்களும் தென்மாநிலங்கள் ஆகும். மகாராஷ்டிரா என்ற ஒற்றை மாநிலத்தில் மட்டும் 25753 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சேர்த்தே 29149 பேருக்குத்தான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தயாராக வேண்டும் தமிழகம்
தமிழகத்தில் டெல்லி மாநாடு சம்பவத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் பரவல் என்பது கடுமையாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் என்பது மொத்த பரிசோதனையில் 13.11 சதவீதம் என்று உள்ளது. இது இந்தியாவில் ஒட்டுமொத்த சராசரியை விட மூன்று மடங்கு அதிகம் ஆகும். அதுமட்டுமின்றி தேசிய அளவில் 10 லட்சம் பேரில் 95 பேருக்கு சோதனை செய்யப்படும் நிலையில், தமிழகத்தில் அதைவிட குறைவாக 74 பேருக்குத்தான் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகம் கூடுதல் பரிசோதனைகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
மகாராஷ்டிராவிற்கு அதிகம்
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு மிக குறைவான நிதியையே ஒதுக்கி உள்ளது. மகாராஷ்டிராவுக்கு 1611 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு 910 கோடியும், கேரளாவுக்கு 1277 கோடியும், ஹிமாச்சல பிரதேசத்திற்கு 953 கோடியும், பஞ்சாப்பிற்கு 638 கோடியும் ஒதுக்கி உள்ளது. ஆனால் தமிழகத்திற்கு ரூ. 550 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இந்நிலையில் தமிழகம் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் மிககுறைவான பணம் ஒதுக்கியது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழகம் கொரோனா பாதிப்பில் இருந்து வெளியே வர மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.