ஆயுர்வேதம்...குஜராத்துக்கு முக்கியத்துவம்...கேரளா தமிழ்நாடு புறக்கணிப்பு...ராஜ்ய சபாவில் எதிர்ப்பு!!
டெல்லி: குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஆயுர்வேத நிறுவனங்களை இணைத்து தேசிய அந்தஸ்து வழக்கி இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை இன்று ராஜ்ய சபாவில் பதிவு செய்தன. நாடு முழுவதும் ஆயுர்வேதா மையங்கள் இருக்கும்போது குஜராத் மாநிலத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பி டாக்டர் சாந்தனு சென் கேள்வி எழுப்பி இருந்தார்.
ராஜ்ய சபாவில் இன்று குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருக்கும் அரசு சார்ந்த மூன்று ஆயுர்வேதா நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு என்று 15 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு கமிட்டி அமைக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பி டாக்டர் சாந்தனு சென் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், ''நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுர்வேதா மையங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, குஜராத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து இருப்பது ஏன்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், பிஜேடி எம்பி பிரசாந்த் நந்தாவும், ''ஆயுர்வேதாவை வலுப்படுத்தும்போது சுகாதாரத்துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.
திமுக எம்பி சண்முகம் பேசுகையில், குஜராத்தில் இருக்கும் ஆயுர்வேதா நிறுவனத்துக்கு சாதகமாக இந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது'' என்றார். ஒய்எஸ்ஆர்சிபி எம்பி வி. விஜய்சாய் ரெட்டி பேசுகையில், ''மத்திய அரசின் தேசியக் கல்வி கொள்கையின் ஒரு அங்கமாக இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தின் நம்பிக்கையை அதிகரிக்கும்'' என்றார்.
பாஜகவின் உபி.யில் ஓராண்டில் 400 கைதிகள் மரணம்- லாக்கப் சாவுகளில் மபி-க்கு பின் தமிழகம், குஜராத் டாப்
கேரளா சிபிஐ (எம்) எம்பி கே.கே. ராஜேஷ் பேசுகையில், ''ஆயுர்வேதா மருத்துவத்துக்கு புகழ் பெற்ற மாநிலம் கேரளா, ஆனால், கேரளா புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு ஏன் கேரளா குறித்து யாரும் சிந்திக்கவில்லை. ஆயுர்வேதா மருத்துவத்தில் கேரளாவுக்கு தேசிய அந்தஸ்து வழங்க வேண்டும்'' என்றார்.
அதிமுக எம்பி எம். தம்பிதுரை பேசுகையில், ''சித்தா மருத்துவமும் மிகவும் சிறப்பு பெற்றது. தமிழ்நாட்டில் இருக்கும் சித்தா மருத்துவத்துக்கும் தேசிய அந்தஸ்து வழங்க வேண்டும். குஜராத் மட்டுமின்றி நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேசிய அந்தஸ்து வழங்க வேண்டும்'' என்றார்.
தமிழ்நாடு சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவத்திலும் சிறந்து விளங்கி வருகிறது. தற்போது கொரோனாவுக்கும் சித்தா மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு இதில் நல்ல பலன் கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது, சித்த மருத்துவம் ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்று தமிழகத்தில் இருந்து கேள்வியை எழுப்பியுள்ளனர்..