எடப்பாடி பழனிச்சாமி மீதான சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
Recommended Video
டெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலை திட்டங்கள் உட்பட தமிழகத்தில் நடைபெற்ற ரூ.4800 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலான பணிகளில் உறவினர்கள், நண்பர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு நடந்துள்ளது என்றெல்லாம் குறிப்பிட்டு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த புகாரை சரியாக விசாரிக்காமல் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, விசாரணைக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக தரப்பே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு உத்தரவு வந்துள்ளது. ஆம், ஹைகோர்ட், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க அக்டோபர் 12ம் தேதி உத்தரவிட்டது.
முதல்வரே சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளதால் அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இதிலிருந்து மீண்டுவர சட்ட ரீதியாக முதல்வர் சில நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.