நிர்பயா நிதி...தமிழகத்துக்கு ரூ. 303.06 கோடி ஒதுக்கீடு...லோக் சபாவில் ஸ்மிருதி இரானி!!
டெல்லி: மாநிலங்களுக்கு நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் ரூ.3,024 கோடி நிதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், தமிழகத்துக்கு வழங்கப்பட்ட ரூ.303.06 கோடியில் ரூ.265.55 கோடி செலவிடப்பட்டு இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி லோக் சபாவில் தெரிவித்தார்.
மாநிலங்களுக்கு எவ்வளவு நிர்பயா நிதி வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் எவ்வளவு செலவிட்டுள்ளனர் என்று கேட்கப்பட்டு இருந்த கேள்விக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இவ்வாறு பதில் அளித்து இருந்தார்.
இதுகுறித்து லோக்சபாவில் அவர் பேசுகையில், ''நிர்பயா நிதியிலிருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.3,024.46 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்கள் ரூ.1,919.11 கோடியை செலவிட்டுள்ளன. அதிகபட்சமாக டெல்லிக்கு விடுவிக்கப்பட்ட ரூ.409.03 கோடியில், ரூ.352.58 கோடி செலவிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வழங்கப்பட்ட ரூ.324.98 கோடியில் ரூ.216.75 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வழங்கப்பட்ட ரூ.303.06 கோடியில் ரூ.265.55 கோடி செலவிடப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், "ரூ.2.97 கோடி மதிப்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை உரிய நேரத்தில் திறம்பட விசாரிப்பதற்காக 14,950 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைக்கான பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் இந்தக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 3,056 கருவிகளும், ராஜஸ்தான் மாநிலத்துக்கு 1,452 கருவிகளும், மத்தியப் பிரதேசத்துக்கு 1,187 கருவிகளும் வழங்கப்பட்டு உள்ளது'' என்றார்.