தமிழ்நாடு தான் டாப்... சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது... மத்திய அரசு தகவல்
டெல்லி: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள உலகின் பழமையான கலாசாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச்சின்னங்கள், பிரமிக்கத்தக்க கோயில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, மனதை வசீகரிக்கும் இயற்கைத் தோற்றங்கள், வனப்பகுதிகள் மற்றும் யுனெஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரியச் சின்னங்கள் முதலியவை சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினர் அதிக அளவில் சுற்றுலா பயணிகளாக வருவது தொடர்கிறது. பன்னாட்டு விமான நிலையங்கள், தரமான சாலை வசதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் அதிகம் இருப்பதும் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 12.1% அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டு 15.55 மில்லியனாக இருந்த சுற்றுலா பயணிகளின் வருகை, 2018-ம் ஆண்டு 17.42 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2014ம் ஆண்டு முதல் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.