ஆன் லைன் மோசடி... ஏமாறுவதில் தமிழகம் முதலிடம்... ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: ஆன் - லைன் மோசடியில், ஏமாறுவதில் இந்தியாவிலேயே தமிழர்கள் தான் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவலை வெளியிட்டுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
புள்ளி விவர பட்டியல் படி, 2016-17ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரை அதிகபட்சமாக தமிழகத்தில் 56 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 46 கோடி ரூபாய் இழப்புடன் மகாராஷ்டிரா 2வது இடத்திலும், 31 கோடி ரூபாய் பறிகொடுத்து ஹரியானா 3வது இடத்திலும், டெல்லி மற்றும் கர்நாடக மாநிலங்கள் 18 கோடி ரூபாயை இழந்து 4வது இடங்களிலும் உள்ளன.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 644 ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுள்ளன. அதேசமயம், இந்த மோசடி தொடர்பாக பதியப்படும் வழக்குகளின் அடிப்படையில் தமிழகம் தேசிய அளவில் 3வது இடத்தில் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஏடிஎம், கிரெடிட் கார்டு, போன் மூலமாக மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு பின்வருமாறு:
2016-17 ம் ஆண்டு - 4 கோடி ரூபாய்
2017-18 ம் ஆண்டு - 41 கோடி ரூபாய்
2018-19 ம் ஆண்டு - 11 கோடி ரூபாய்
மோசடி தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை
2016-17 ம் ஆண்டு - 208 வழக்குகள்
2017-18 ம் ஆண்டு - 222 வழக்குகள்
2018-19 ம் ஆண்டு - 214 வழக்குகள்
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே கருதப்படுகிறது. இங்குள்ள மக்கள் தங்கள் வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பதற்காக ஒதுக்குகிறார்கள். இப்படி சேமிப்பவர்களையே டார்கெட் செய்து மோசடி செய்கிறார்கள்.
இவர்களால்தானே தேர்தலே ரத்தானது.. மறுபடியும் வேட்பாளர்களா.. தீபலட்சுமி கேட்பதில் என்ன தப்பிருக்கு
மூத்த குடிமக்களிடம் மோசடி
குறிப்பாக 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களிடமே அதிகளவு ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுள்ளன. வயதானவர்கள், தொழில்நுட்பத்தை அறியாத காரணத்தால் ஆன்லைன் மோசடியில் அதிகளவில் பணத்தை இழப்பதாக தெரியவந்துள்ளது. இதுதவிர இணையதள பயன்பாடு அதிகரித்திருப்பதும் ஆன் லைன் மோசடிகள் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.
ஆன்லைன் மோசடி
ஆன் லைன் மோசடிகளை தடுக்க வங்கிகள் அவ்வப்போது பல்வேறு வழிமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இருப்பினும் தொழில்நுட்ப வளர்ச்சியால், ஈசியாக, வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டும், கார்டு எண்களை திருட்டு தனமாக எடுத்தும் மோசடியில் ஈடுபடுகினற்னர்.
ஆன் லைன் பணப்பரிமாற்றம்
இதனிடையே, இந்தியாவிலேயே அதிகளவு இன்டெர்நெட் பயன்பாடு மற்றும் அதிகளவு ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் ஈடுபடும் பிரதான மாநிலங்களில் ஒன்று தமிழகம். மோசடியாளர்கள் கவனம் தமிழகம் நோக்கி வருவதற்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்கின்றனர் சைபர் வல்லுனர்கள். இதுபோன்ற மோசடிகளை வெளியே சொல்வதற்கு பயந்து புகார் அளிக்காமல் பலரும் விட்டுவிடுவதால் மோசடியாளர்கள் தைரியமாக தொடர்ந்து செயல்படுகிறார்கள்.
நடவடிக்கை என்ன?
2017ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி இந்திய அளவில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் ஆன்லைனின் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 13 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இனி வரும் நாட்களில், மோசடி தடுக்கப்படுமா? அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.