பிரதமர் மோடி ஜன.27-ல் பரீக்ஷா பே சர்ச்சா - தேர்வும் தெளிவும் கலந்துரையாடல்- தமிழ்நாடு பாஜக தீவிரம்
டெல்லி: தேர்வுகள் எழுதுகிற மாணவர்களுடனான பிரதமர் மோடியின் தேர்வும் தெளிவும் என்கிற பரீக்ஷா பே சர்ச்சா கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 27-ந் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த உரையாடல் நிகழ்ச்சியை தமிழ்நாட்டின் பள்ளிகளில் மாணவர்கள் காண்பதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பாஜக மேற்கொண்டு வருகிறது.
தேர்வு அச்சத்தை நீக்கி மன அழுத்தம் இல்லாத வகையில் பொதுத் தேர்வு எழுதும் மனநிலையை மாணவர்களிடையே ஏற்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் பரீக்ஷா பே சர்ச்சா 2023 என்ற நிகழ்ச்சி வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வித்துறை இணையமைச்சர்கள் அன்னபூர்ண தேவி, டாக்டர் சுபாஷ் சர்கார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தேர்வு குறித்த அச்சத்திலிருந்து வெளிவந்து அவற்றை விழாவாக கொண்டாடுவதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தனித்துவம் மிக்க கலந்துரையைாடல் "தேர்வு குறித்த உரையாடல் 2023" நிகழ்வில், நாடு முழுவதிலுமிருந்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு தேர்வு குறித்த மாணவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கி வாழ்க்கையை உற்சாகமாகக் கொண்டாடுவதற்கு அவர்களை தயார் படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த நிகழ்வு மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை மூலம் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர் என கூறியிருந்தார்.
இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பிரதமர் மோடியின் உரையாடலை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்காக மாணவ, மாணவிகளுக்கு பாஜக சார்பில் ஓவியப்போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் பிரதமர் மோடியின் கலந்துரையாடலில் நேரடியாக பங்கேற்க உள்ளனர். பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.என்.எஸ்.பிரசாத் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை வழங்கினார். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 500 மாணவ, மாணவியர் பிரதமர் மோடியின் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கினார். தனியார் பள்ளிகளில் பிரதமர் மோடியின் உரையாடலை வீடியோ மூலம் ஒளிபரப்பவும் தமிழ்நாடு பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.