"சோனியா".. சூடு பிடிக்கும் முதல்வரின் டெல்லி பயணம்.. அந்த மீட்டிங்தான் ஹைலைட்.. என்னவா இருக்கும்?
டெல்லி: டெல்லி செல்லும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் பிரதமர் மோடியை சந்திக்கும் நிலையில் இன்னொரு பக்கம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். பல்வேறு விஷயங்களுக்காக இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!
பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வைக்க இருக்கிறார். அதில் நீட் தேர்வு ரத்து , ஜிஎஸ்டி ஒதுக்கீடு மற்றும் வேக்சின் ஒதுக்கீடு போன்றவை பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டம்
இந்த பயணத்தில் முதலில் முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்திப்பார், பின் டெல்லியில் கட்டப்படும் அறிவாலய கட்டிடத்தை பார்வையிடுவார், பின்னர் சில மத்திய அமைச்சர்களை சந்திப்பார் என்பது மட்டுமே முதலில் திட்டமாக இருந்தது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள அதிகாரபூர்வ பயண திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்டிங்
முதல்வர் ஸ்டாலின் சோனியா காந்தி இடையே 18ம் தேதி நடக்க உள்ள இந்த மீட்டிங் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. 3 முக்கியமான விஷயம் இதில் பேசப்படும் என்று கூறுகிறார்கள். முதல் விஷயம் சோனியா காந்தியின் உடல்நிலை. சோனியா காந்தி சமீபத்தில் உடல்நலக்குறைவால் ஆக்டிவ் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் விசாரிப்பார்.
இரண்டாவது விஷயம்
இரண்டாவதாக 7 பேர் விடுதலை. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் 7 பேர் விடுதலை குறித்து நேரடியாக சோனியா காந்தியிடம் பேச வாய்ப்புள்ளது. 7 பேரையும் எப்போதோ மன்னித்துவிட்டோம் என்று ராகுல் காந்தி கூறிய நிலையில் இந்த சந்திப்பில் அவர்களின் விடுதலை குறித்தும் பேச வாய்ப்புள்ளது.
மூன்றாவது விஷயம்
மூன்றாவது விஷயம்தான் முக்கியம் என்கிறார்கள். தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக மாநில கட்சிகளின் கூட்டணி உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் இல்லாமல் திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜி தலைமையில் தேசிய அளவிலான இந்த கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திப்பு
இதற்காக இப்போதே மம்தாவிற்கு நெருக்கமான பிரஷாந்த் கிஷோர் வரிசையாக தலைவர்களை சந்தித்து வருகிறார். சரத் பவார், நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க தொடங்கி விட்டார். காங்கிரஸ் இந்த கூட்டணியில் இடம்பெற்றாலும், தலைமை தாங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மம்தாதான் கூட்டணியை முன்னிறுத்த வாய்ப்புள்ளது.
கூட்டணி
இப்படிப்பட்ட நிலையில் தேசிய அளவிலான கூட்டணி குறித்து ஸ்டாலின் கண்டிப்பாக சோனியா காந்தியிடம் பேசுவார் என்றும் நம்பப்படுகிறது. தேசிய அளவில் மாநில கட்சிகளை திரட்டுவதன் முக்கியத்துவம் குறித்தும், மகா கூட்டணியின் அவசியம் குறித்தும் இவர்கள் பேச வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.