ஒருபக்கம் ரிப்போர்ட் கேட்ட ஆளுநர்.. மறுபக்கம் அமித் ஷாவுடன் மீட்டிங்.. நீண்ட ஆலோசனை.. பேசியது என்ன?
டெல்லி: நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இவர்கள் நீண்ட நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ இறையன்புவிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி வளர்ச்சி திட்டங்கள் குறித்த ரிப்போர்ட் ஒன்றை கேட்டு இருப்பதாக வெளியாகும் செய்திகள் தமிழ்நாடு அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, ஆளுநர் தற்போது தமிழ்நாடு நலத்திட்டங்கள் குறித்து தலைமை செயலாளரிடம் ரிப்போர்ட் கேட்டு இருக்கிறார்.
ஒவ்வொரு துறையிலும் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் என்ன என்று கேட்டுள்ளார். இது வழக்கமாக நடக்கும் நடைமுறைதான். இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தலைமை செயலாளர் வெ இறையன்பு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னா ரெட்டி, பன்வாரிலால் வரிசையில் ஆளுநர் ரவி? இறையன்பு விளக்கமும், திமுக அமைதியும்! பின்னணி என்ன?
விளக்கம்
நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன, அதில் எவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள், பயனடைந்த மக்களின் விவரங்கள் குறித்த ரிப்போர்ட்டை ஆளுநர் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநரின் இந்த ரிப்போர்ட் சர்ச்சை ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் ஆளுநரின் டெல்லி பயணம் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி தற்போது 6 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி
இந்த டெல்லி பயணத்தில் ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். டெல்லி சென்ற ஆளுநர் இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை சந்தித்தார். சுமார் 20 நிமிடங்கள் இவர்கள் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர். அதன்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஆளுநர் சந்தித்தார். தமிழ்நாடு சட்ட ஒழுங்கு, எதிர்க்கட்சிகள் கொடுத்த புகார்கள், அரசியல், எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்து இதில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்திப்பு
இந்த நிலையில்தான் இந்த தொடர் சந்திப்புகளை தொடர்ந்து நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அமித் ஷாவை ஆளுநர் நேற்று இரவு சந்தித்ததாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்பின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் ஆளுநர் ஆர். என் ரவி சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ஆளுநர் ஆர். என் ரவி
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதாக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் தமிழ்நாடு பாஜக குற்றஞ்சாட்டி இருந்தது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழ்நாடு ஆளுநர் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்து இருப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
அமித் ஷா
அதோடு இவர் முன்னாள் உளவு அதிகாரி என்பதால் உள்துறை அமைச்சருக்கு உளவு தகவல்களை தெரிவித்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு விவரங்களில் ஆளுநர் தலையிடுவதாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.