பசியை தீர்ப்பதில் சிறப்பாக செயல்பாடு.. தமிழ்நாட்டை பாராட்டிய நிதி ஆயோக்
டெல்லி: சமூக, பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவதாக, நிதி ஆயோக் அமைப்பு வெகுவாக பாராட்டியுள்ளது.
தொழில் வளர்ச்சி, முதலீட்டுக்கு ஏற்ற மாநிலம் என பொருளாதார வளர்ச்சி குறித்து பல்வேறு அறிக்கைகள் அவ்வப் போது வெளியாகிறது. அதில், தமிழகத்தின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாட்டிலுள்ள மாநிலங்களின் சமூக பொருளாதார குறியீடுகள் குறித்த அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையுடன் மத்திய அரசு இணைந்து தயாரித்த 2018ம் ஆண்டு சமூக, பொருளாதார குறியீட்டு அறிக்கையில் தமிழகத்திற்கு இனிப்பான, நல்ல சேதி கிடைத்துள்ளது.
தமிழ்நாடு சிறப்பு
அந்தப் பட்டியலில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பசியை தீர்ப்பதில் சிறப்பாக செயல் படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கேரளா, ஹிமாச்சல் பிரதேசம்
அந்த குறியீட்டில் கேரளா, ஹிமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவை சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மனோகரமான கேரளாவில் நல்ல சுகாதாரம், கல்வி வழங்கி, பசியைக் குறைத்து பாலின சமத்துவத்தை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மோசமான பீகார், உ.பி.
இந்த குறியீட்டில் அசாம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இலவச திட்டங்கள் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்து அது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால் தமிழகத்தை பயன்படுத்தி, நல்ல திட்டங்களை பல மாநிலங்கள் முன்மாதிரியாக செயல்படுத்தி வருகின்றன.
திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள்
இந்த சூழ்நிலையில் நிதி ஆயோக்கின் குறியீடு ஒரு முன்னேற்றத்தின் அடையாளம் என்று அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். திராவிடக் கட்சிகளுக்கு இந்த பாராட்டு ஒரு பூஸ்ட்டாக அமையும்.. காரணம் கடந்த பல காலமாக திராவிடக் கட்சிகள் கையில்தான் தமிழகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெரிந்தோ தெரியாமலோ பாஜகவுக்கு நிதி ஆயோக் சின்னதாக குண்டு வைத்து விட்டது.