வாடகைத் தாய் விவகாரம்- ரெடிமேட் குழந்தைகள் என விமர்சனம்- தஸ்லிமா நஸ்ரினுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு
டெல்லி: வாடகைத் தாய் தொடர்பாக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் போட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை பிரியங்கா சோப்ரா தமது சமூக வலைதளப் பக்கத்தில், வாடகைத் தாய் மூலம் தாங்கள் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளோம். தங்களது பிரைவசியை கருத்தில் கொண்டு தனித்துவிடுங்கள் எனவும் அதில் பிரியங்கா சோப்ரா பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாகத்தான் தஸ்லிமா நஸ்ரின் ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டார். தமது ட்விட்டர் பக்கத்தில் தஸ்லிமா நஸ்ரின் பதிவிட்டிருந்ததாவது: வறுமையில் வாடுபவர்களை செல்வந்தர்கள் பயன்படுத்திக் கொள்ளத்தான் வாடகைத்தாய் முறையே உருவானது. குழந்தைகள் வேண்டும் என நினைத்தால் தத்தெடுக்கலாம் அல்லவா. தங்களுடைய ஜீனிலேயே குழந்தைகள் தேவை என்பது சுயநலத்தை வெளிப்படுத்துகிறது.
வாடகைத்தாய் மூலம் ரெடிமேட் குழந்தைகளைப் பெறுகிறவர்கள் அம்மா என்கிற தாய்மையை எப்படி உணர்வார்கள்? குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றவர்களுக்கு இருக்கும் அதே உணர்வு, இவர்களுக்கும் இருக்குமா? என கேள்வி எழுப்பியிருந்தார். தஸ்லிமாவின் இந்த கருத்துக்குதான் நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அதெப்படி ரெடிமேட் குழந்தைகள் என சொல்லலாம்? என @solankineha என்ற நெட்டிசன் கேள்வி கேட்டுள்ளார். @twinkyjinmin என்பவர், அது ஏன் குழந்தைகள் விஷயத்தில் பெண்கள் மட்டும் வலியை வேதனையை அனுபவிக்க வேண்டும்? ஆண்கள் அத்தகைய வலியை அனுபவிப்பது இல்லையே என்பது அவரது கேள்வி. அதேநேரத்தில் தஸ்லிமா நஸ்ரினுக்கு ஆதரவாகவும் ஒருசிலர் கருத்துகளை பதிவிட்டிருக்கின்றனர்.
தஸ்லிமா நஸ்ரின் வங்கதேசத்தை சேர்ந்த எழுத்தாளர். 1980களில் இஸ்லாம் மற்றும் மதங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினார். பெண்ணியம் தொடர்பான நூல்கள், கட்டுரைகளை எழுதினார். இதனால் வங்கதேசத்தில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார். இதனையடுத்து அந்த நாட்டை விட்டு வெளியேறி ஸ்வீடனில் தஞ்சமடைந்தார். தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா நாவல் பேசுபொருளாக விளங்கியது. 2008-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார் தஸ்லிமா நஸ்ரின். அவரைப் பொறுத்தவரையில் தம்மை ஒரு நாத்திகன் என அழைத்துக் கொள்வது உண்டு. தஸ்லிமாவின் பல கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களை ஏற்கனவே கிளப்பி இருக்கின்றன.