இது என்னப்பா டாடாவுக்கு வந்த சோதனை.. இந்த ஆண்டு ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனை
Recommended Video
டெல்லி: டாடா நிறுவனத்தின் குறைந்த விலை காரான நானோ கடந்த 9 மாதங்களில் ஒரே ஒரு கார் தான் விற்பனையாகி இருக்கிறது. அதுவும் பிப்ரவரி மாதம் தான் விற்பனையானது. இந்நிலையில் நானோ கார் உற்பத்தி கைவிடப்பட்டதாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை டாடா மோட்டார்ஸ் வெளியிடவில்லை.
கடந்த 2009 ஆம் ஆண்டு டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா குறைந்த விலையில் அதாவது ஒரு லட்சத்திற்குள் நானோ என்ற காரை உற்பத்தி செய்யப்போவதாக கனவுத் திட்டம் ஒன்றை அறிவித்தார்.
இதன்படியே ஒரு லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கப்பட்ட நானோ காருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் காரில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதாக புகார்கள் வந்தது. இந்த பிரச்சனைகளை டாடா நிறுவனம் சரி செய்தது.
அடைமொழியால் பாதிப்பு
இருப்பினும் மலிவு விலை கார் என்ற அடைமொழியே அந்த காரை யாரும் வாங்க முடியாத அளவுக்கு வாடிக்கையாளர்களிடம் விலக்கி வைத்தது. இதன் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நானோ கார்கள் விற்பனையில்லாமல் தேங்கின.
1000 கோடி இழப்பு
இதற்கிடையே டாடா நிறுவனத் தலைவராக இருந்த மிஸ்திரி, நானோ கார் உற்பத்தியின் மூலம் 1000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியதுடன், நிறுவனத்தின் பெருமைக்காக கார் தயாரிக்கப்படுவதாகவும் பேசியதால் அவர் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
யாரும் வாங்கவில்லை
இந்த நிலையில், இந்த வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனையாகி உள்ளது. அதுவும் கடந்த பிப்ரவரி மாதம் தான் ஒரே ஒரு கார் விற்பனை ஆனது. அதன் பிறகு யாருமே இந்தியாவில். நானோ காரை வாங்கவில்லை.
2020 ஏப்ரலில் நிறுத்தம்
இந்நிலையில் கடந்த சில மாதங்களில் நானே காரை உற்பத்தி செய்ததாக டாடா நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது இல்லை. இதன் மூலம் 9 மாதங்களாக உற்பத்தி செய்யவில்லை. எனினும் நானோ கார் விற்பனை 2020 ஏப்ரல் முதல் முற்றிலும் நிறுத்தப்படும் என தெரிகிறது. முன்னதாக 2018ம் ஆண்டில் 299 நானோ கார்களை உற்பத்தி செய்த டாடா நிறுவனம் 297 கார்களை விற்பனை செய்து இருந்தது.