போன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு
டெல்லி: இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்துவது பெரும் கஷ்டமாக உள்ளதாக அண்மையில் கூறியிருந்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என். சந்திரசேகரன் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
மும்பையில் நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என். சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும் போது, இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்துவது பெரும் கஷ்டமாக உள்ளதாக வேதனை தெரிவித்தார்.
தலைவர் பதவியில் இருந்தபோது.. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியலையே.. அமித் ஷாவுக்கு ஏமாற்றம்தான்!
முன்னேற்றம்
தொழில் தொடங்கி நடத்துவதற்கு பல்வேறு தடைகளை தாண்ட வேண்டியுள்ளதாக கூறியிருந்த சந்திர சேகரன், மேலாண்மை, தொழில்நுட்பம், போட்டியை சமாளிக்கக் கூடிய திறன் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அரசு தரணும்
அரசு தரப்பில் இருந்து முழு அளவில் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் சந்திரசேகரன் மும்பையில் பேசியிருந்தார்.
வேகமாக செல்வது
இப்போதுள்ள இளைஞர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்றும் அவர்களை வேகமாக செல்லுங்கள் என்று சொல்லி வந்தால் மட்டும் வளம் காண முடியாது; அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான ஒத்துழைப்புகளும் முக்கியம் என்று டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் கடந்த 17ம் தேதி பேசியிருந்தார்.
நிதியமைச்சருடன் சந்திப்பு
இந்த பேச்சு பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என். சந்திரசேகரன் இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரியவில்லை.
முக்கியத்துவம்
இன்னும் சில வாரங்களில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் சந்திரசேகரன் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.