கேரளாவை புரட்டி போட்ட 'டவ் தே' புயல்.. தீவிர புயலாக மாறியது.. குஜராத் அருகே நிலைகொண்டுள்ளது!
டெல்லி: கேரளாவை புரட்டி போட்ட டவ் தே புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. குஜராத்தில் இருந்து 920 கி.மீ தெற்கு தென் கிழக்கில் டவ் தே நிலை கொண்டுள்ளது.
Recommended Video
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மக்களை தொடர்ந்து துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.
டவ் தே புயல்
இது போதாதென்று மக்களை அச்சுறுத்தும் வகையில் டவ் தே என்ற புயல் அரபிக் கடலில் உருவாகியுள்ளது. இந்த புயல் வருகிற 18-ம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக 6 மாநிலங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்தது.
6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை
அதாவது கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் லட்சத்தீவு தீவுகள், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளியின் தாக்கம் இருக்கும் என்றும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
கேரளாவை புரட்டி போட்டது
திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, கோட்டயம் மற்றும் அலபுழா மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது..இந்த புயல் நேற்று உருவானபோதே கேரளாவின் கடலோரத்தில் இருக்கும் பல்வேறு மாவட்டங்கள் உளப்பட பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த மழை மற்றும் புயல் காற்று காரணமாக ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன.
அடித்து செல்லப்பட்ட சாலைகள்
கடலில் எழுந்த ராட்சத அலைகள் கடலோர வீடுகளுக்குள் புகுந்தன. காசர்கோடு கடற்கரையில் இருந்த 2 மாடி கட்டிடம் அபப்டியே கடலில் விழுந்தது. திருவனந்தபுரத்தில் கடல் நீரால் சாலைகள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் மழை காரணமாக பல அணைகள் நிரம்பின. இடுக்கியில் உள்ள கல்லர்குட்டி, மலங்கரா மற்றும் பூதத்தங்கெட்டு அணைகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தில் சென்றதால் அந்த அணைகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கனமழை
கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தவித்த மக்களை இந்திய கடற்படையை வீரர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் மீட்டனர். டவ் தே புயலால் தமிழகத்தின் கன்னியாகுமரியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் தேனி, நீலகிரி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. தமிழகத்தின் தேனி, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 19-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்துளளது.
மோடி ஆலோசனை
டவ் தே புயல் முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது புயலில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் 'டவ் தே' புயல் தீவிர புயலாக மாறியுள்ளது.
12 கி.மீ வேகம்
அதாவது 'டவ் தே' புயல் தீவிர புயலாக மாறி 12 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. குஜராத்தில் இருந்து 920 கி.மீ தெற்கு தென் கிழக்கில் டவ் தே நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அதி தீவிரமாக மாறவுள்ளது. டவ் தே புயல் குஜராத்தில் 18-ம் தேதி கரையை கடக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் குஜராத்தில் முன் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை உள்ள மாநிலங்களில் கடற்படை வீரர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் தயாராக உள்ளனர்.